மலையப்ப சுவாமி 
ஆன்மிகம்

திருப்பதியில் நாளை மறுநாள் பல்லவோற்சவம்

பல்லவோற்சவ தினத்தன்று மலையப்ப சுவாமி, கர்நாடக சத்திரத்திற்கு எழுந்தருளி, அங்கு கர்நாடக அரசு மற்றும் மைசூரு சமஸ்தானத்தின் சார்பாக அளிக்கப்படும் மரியாதைகளை ஏற்றுக் கெள்வார்.

திருப்பதி,

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆண்டு முழுவதும் பல்வேறு உற்சவங்கள் நடைபெறுகின்றன. அதில், மைசூர் மகாராஜாவின் பிறந்த நட்சத்திர நாளில் நடத்தப்படும் பல்லவோற்சவம் முக்கியத்துவம் வாய்ந்தது. அதாவது, திருமலை கோவிலுக்கு மிகப்பெரிய அளவில் காணிக்கைகளை வழங்கிய மைசூர் மகாராஜாவின் பிறந்த நட்சத்திர நாளை முன்னிட்டு ஆண்டுதோறும் பல்லவோற்சவம் என்ற பெயரில் வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

பல்லவோற்சவம்

அவ்வகையில், இந்த ஆண்டுக்கான பல்லவோற்சவம் நாளை மறுநாள் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெறுகின்றன. பல்லவோற்சவ தினத்தன்று சகஸ்ர தீப அலங்கார சேவைக்குப் பிறகு ஸ்ரீதேவி - பூதேவி சமேத மலையப்ப சுவாமி, கர்நாடக சத்திரத்திற்கு எழுந்தருளி, அங்கு கர்நாடக அரசு சார்பாகவும், மைசூரு சமஸ்தானத்தின் சார்பாக அளிக்கப்படும் மரியாதைகளை ஏற்றுக் கெள்வார். கர்நாடக மாநில அரசின் பிரதிநிதிகளும், மைசூர் மகாராஜாவின் பிரதிநிதிகளும் சிறப்பு ஆரத்தி எடுத்து மலையப்ப சுவாமியை வரவேற்பார்கள். இந்த வைபவம் கடந்த 300 ஆண்டுகளாக நடத்தப்பட்டு வருகிறது.

மைசூர் மகாராஜாவின் நன்கொடை

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரம்மோற்சவத்தில் பயன்படுத்தப்படும் தந்த பல்லக்கு, ஏராளமான நிலம் மற்றும் நகைகள், பல்வேறு வாகனங்கள் ஆகியவற்றை மைசூர் மகாராஜா நன்கொடையாக அளித்ததாக புராணங்கள் கூறுகின்றன.

ஏழுமலையான் கோவிலில் சுப்ரபாதத்திற்கு முன்னதாக 'நவநீத ஆரத்தி' (வெண்ணெய் ஆரத்தி) வழக்கத்தையும், 'பிரம்ம தீபம்' மற்றும் 'மகாராஜா தீபம்' ஆகியவற்றிற்கு தினமும் ஐந்து கிலோ நெய் காணிக்கையாக வழங்கும் வழக்கத்தையும் மைசூர் மகாராஜா தொடங்கி வைத்தார். இந்த நடைமுறை இன்றும் தொடர்ந்து நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.