வேளாங்கண்ணி,
கிறிஸ்தவர்களின் முக்கிய பண்டிகைகளில் ஈஸ்டர் பண்டிகையும் ஒன்றாகும். ஈஸ்டர் பண்டிகைக்கு முந்தைய ஞாயிற்றுக்கிழமை அன்று குருத்தோலை பவனி நடைபெறுவது வழக்கம். இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்படுவதற்கு முன்பு மக்கள் அவரை அரசராக பாவித்து ஊர்வலமாக அழைத்து சென்றார்கள். அந்த நிகழ்ச்சியை நினைவு கூறும் வகையில் கிறிஸ்தவர்கள் உலகம் முழுவதும் குருத்தோலை திருநாளாக கொண்டாடி வருகின்றனர்.
அவ்வகையில் இந்த ஆண்டு ஈஸ்டர் பண்டிகை வருகிற 5-ந்தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், இன்று குருத்தோலை ஞாயிறு கொண்டாடப்படுகிறது. இதையொட்டி ஆலயங்களில் சிறப்பு திருப்பதி, குருத்தோலை பவனி நடைபெறுகிறது.
நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் உள்ள புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தில் குருத்தோலை ஞாயிறு கொண்டாடப்படுகிறது. இதையொட்டி குருத்தோலை பவனி நடைபெற்றது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு குருத்தோலைகளை கையில் ஏந்தியபடி ஒசன்னா கீர்த்தனைகள் பாடியவாறு பவனியாக சென்றனர். பேராலய முகப்பில் இருந்து தொடங்கிய குருத்தோலை பவனியானது, சர்ச் ரோடு, நடுதிட்டு வழியாக சென்று பேராலயத்தின் மேல்கோவில் பகுதியில் சென்று நிறைவடைந்தது.
முன்னதாக காலையில் குருத்தோலை ஞாயிறு சிறப்பு திருப்பலி நடைபெற்றது. பேராலய அதிபர் இருதயராஜ் தலைமை தாங்கி திருப்பலியை நிறைவேற்றினார். திருப்பலியில் ஏராளமான அருட்சகோதரிகள், சகோதரர்கள் கலந்து கொண்டனர்.
குருத்தோலை ஞாயிறையொட்டி வேளாங்கண்ணி பேராலயத்தில் தமிழ் தவிர தெலுங்கு, மலையாளம், ஆங்கிலம், இந்தி ஆகிய மொழிகளில் சிறப்பு திருப்பலிகள் நடைபெறுகின்றன.