சபரிமலை:
சபரிமலை அய்யப்பன் கோவிலில் பங்குனி உத்திர ஆராட்டு திருவிழா கடந்த 23-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் வழக்கமான பூஜையுடன் உத்சவ பலி சிறப்பு வழிபாடு நடந்தது.
9-ம் திருவிழாவான நேற்று முன்தினம் இரவு 9 மணிக்கு சரம் குத்தியில் பள்ளிவேட்டை சடங்கு நடைபெற்றது. விழாவின் நிறைவாக நேற்று பகல் 11.45 மணிக்கு பம்பை ஆற்றில் அய்யப்பனுக்கு ஆராட்டு நடைபெற்றது.
முன்னதாக காலை 9 மணிக்கு நடைபெற்ற ஆராட்டு பலிக்கு பின், சன்னிதானத்தில் இருந்து ஆராட்டு ஊர்வலம் புறப்பட்டு பம்பை ஆற்றுக்கு வந்தது. அங்கு திரளான பக்தர்கள் முன்னிலையில் அய்யப்பனுக்கு ஆராட்டு நடத்தப்பட்டது. மதியம் 3 மணிக்கு சுவாமி ஊர்வலம் பம்பை கணபதி கோவிலில் இருந்து புறப்பட்டது. இந்த ஊர்வலம் சன்னிதானம் சென்றடைந்ததும் மாலை 6 மணிக்கு திருவிழா கொடி இறக்கப்பட்டு, 10 நாள் திருவிழா நிறைவு பெற்றது. மேலும் இரவு 10 மணிக்கு கோவில் நடை அடைக்கப்பட்டது.