கும்பாபிஷேகம் 
ஆன்மிகம்

பாபநாசம்: மணல்மேடு விநாயகர்-மதுர காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

கும்பாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தஞ்சாவூர்,

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகே ராஜகிரி ஊராட்சி, மணல்மேடு கிராமத்தில் ஸ்ரீ விநாயகர் ஸ்ரீ மதுர காளியம்மன் திருக்கோவில் உள்ளது. இக்கோவிலில் திருப்பணிகள் செய்து கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இப்பணிகள் நிறைவுபெற்றதையடுத்து கும்பாபிஷேக ஏற்பாடுகள் நடைபெற்றன.

கணபதி ஹோமம், மகாலெட்சுமி ஹோமம், நவக்கிரக ஹோமம் உள்பட பூர்வாங்க பூஜைகள் மற்றும் யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. அதனைத் தொடர்ந்து கடம்புறப்பாடு நடைபெற்றது. மேளதாளங்களுடன், பட்டாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க, புனித நீர் கலசம் கோபுரத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது. பின்னர் கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்று, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. மூலவருக்கும் புனித நீரால் அபிஷேகம் செய்யப்பட்டது. கும்பாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.

கும்பாபிஷேக நிகழ்ச்சி ஏற்பாடுகளை மணல்மேடு கிராமவாசிகள், நாட்டாண்மைகள் மற்றும் விழா குழுவினர்கள் செய்திருந்தனர்.