பாரிவேட்டை உற்சவம் 
ஆன்மிகம்

திருப்பதி: சீனிவாசமங்காபுரத்தில் பாரிவேட்டை உற்சவம்

துஷ்ட சக்தியை அழிப்பதைக் குறிக்கும் வகையில், பகவான் சார்பில் அர்ச்சகர்கள் மூன்று முறை வேல் வீசி பாரிவேட்டை உற்சவத்தை நடத்தினர்.

திருப்பதி:

திருப்பதி அருகே உள்ள சீனிவாசமங்காபுரம் கல்யாண வெங்கடேசப் பெருமாள் கோவிலில், சாக்ஷாத்கார வைபவோற்சவம் மூன்று நாட்கள் நடைபெற்றன. இந்த வைபவங்கள் முடிந்தபின், இன்று கல்யாண வெங்கடேஸ்வர சுவாமியின் பாரிவேட்டை உற்சவம் உற்சாகமாக நடைபெற்றது.

இதையொட்டி காலை 7 மணியளவில் கோவிலில் இருந்து கல்யாண வெங்கடேஸ்வர சுவாமி, ஸ்ரீதேவி, பூதேவி ஆகிய உற்சவமூர்த்திகள் ஊர்வலமாக வந்து ஸ்ரீவாரிமெட்டு அருகே உள்ள பாரிவேட்டை மண்டபத்தை அடைந்தனர். அங்கு வழக்கமான வழிபாடுகளுக்குப் பிறகு, பாரிவேட்டை உற்சவம் நடைபெற்றது. துஷ்ட சக்தியை பகவான் அழிப்பதைக் குறிக்கும் வகையில், பகவான் சார்பில் அர்ச்சகர்கள் மூன்று முறை வேல் வீசி இந்த சடங்கை செய்தனர். மேலும், 'ஆஸ்தானம்' நிகழ்ச்சியும் நடைபெற்றது. மாலையில் உற்சவ மூர்த்திகள் மீண்டும் கோயிலுக்கு எழுந்தருளச் செய்யப்பட்டனர்.

பாரிவேட்டை உற்சவம்

அன்ன பிரசாதம்

இந்த நிகழ்ச்சியின்போது திருமலை திருப்பதி தேவஸ்தான அன்னமாச்சார்யா திட்ட கலைஞர்கள் பக்தி சங்கீர்த்தனங்களை வழங்கினர். பஜனைக் குழுக்கள் பக்தி பாடல்கள் மற்றும் கோலாட்டம் ஆகியவற்றை நிகழ்த்தினர். ஸ்ரீவாரி மெட்டு அருகே பக்தர்களுக்கு அன்ன பிரசாதம் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் திருமலை திருப்பதி தேவஸ்தான இணை செயல் அதிகாரி டாக்டர் ஏ. சரத், சிறப்பு நிலை துணை அதிகாரி வரலட்சுமி, உதவி அதிகாரி கோபிநாத், கண்காணிப்பாளர் ராஜ்குமார், பாலாஜி ரங்காச்சார்யுலு மற்றும் பிற அதிகாரிகள், அர்ச்சகர்கள், திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

SCROLL FOR NEXT