திருப்பதி,
திருப்பதி ஏழுமலையான் கோவில் தரிசனத்திற்கு வரும் பக்தர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டுள்ளன.தரிசன வரிசையில் இனி கடுமையான விதிமுறைகள் அமல்படுத்தப்பட உள்ளன. அமிர்தசரஸ் தங்கக் கோவிலில் உள்ளது போல் திருப்பதி கோவிலுக்கும் தனி சட்டம் அமல்படுத்தப்பட உள்ளது. அதன்படி, தரிசனத்திற்கு செல்லும் பக்தர்கள் ஸ்கேனிங் மையம் அருகே உள்ள புத்தகத்தில் கையெழுத்திட்ட பிறகே தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.
இதேபோல், இந்து மதத்தைச் சாராத மாற்று மதத்தினர்கள் தரிசனம் செய்ய விரும்பினால், “இந்து கடவுளை நம்புகிறோம். இந்து கடவுள் மீது நம்பிக்கை வைத்துள்ளோம். நாங்கள் பொட்டு வைத்துக் கொள்கிறோம்” என உறுதிமொழிக் கடிதம் எழுதி கொடுத்த பிறகே தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். அதேபோல், தரிசனத்திற்கு செல்லும் மாற்று மதத்தினர் கட்டாயம் நெற்றியில் நாமம் அணிந்த பிறகே தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பதியில் நேற்று 74,902 பேர் தரிசனம் செய்தனர். 22,869 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.4.05 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது. நேரடி இலவச தரிசனத்தில் வந்த பக்தர்கள் 12 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.