ஆன்மிகம்

மாணவர்களுக்காக நெல்லை இஸ்கான் நடத்தும் ஆளுமை மேம்பாட்டு பயிற்சி.. நாளை தொடங்குகிறது

ஞாயிறு தோறும் மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை, மொத்தம் 5 வாரங்கள் பயிற்சி வகுப்பு நடைபெறும்.

கிருஷ்ண பக்தியை உலகம் முழுவதும் கொண்டு செல்லும் ஆன்மிக பணியை மேற்கொண்டு வரும் அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கம் (இஸ்கான்) சார்பில் ஆன்மிக நிகழ்ச்சிகள் மட்டுமின்றி, சமூக நலன் சார்ந்த நிகழ்ச்சிகளும், மாணவர்களுக்கான சிறப்பு நிகழ்ச்சிகளும் அவ்வப்போது நடத்தப்படுகின்றன.

மாணவர்கள் நல்ல சிந்தனைகளையும், நல்ல பழக்கவழக்கங்களையும் வளர்த்துக் கொள்வதோடு, வாழ்வின் நோக்கத்தை புரிந்து கொண்டு, ஒரு பொறுப்பு மிக்க பக்தி நெறி வாழ்க்கை வாழும் வகையில் இந்த நிகழ்ச்சிகள் ஊக்கம் அளிக்கின்றன.

ஆளுமை மேம்பாட்டு பயிற்சி

அவ்வகையில் மாணவர்களிடத்தில் மறைந்திருக்கும் தனித்திறன்களை வெளிக்கொண்டு வந்து ஆளுமையை மேம்படுத்தும் வகையில், நெல்லை இஸ்கான் கோவில் வளாகத்தில், நாளை புதிய பயிற்சி வகுப்பு தொடங்க உள்ளது.

“கல்வியில் கவனத்தை செலுத்தும் கலை, மன அழுத்தத்திலிருந்து மனமகிழ்ச்சிக்கு திரும்புதல், தீய பழக்கத்திலிருந்து விடுபட்டு சாதனை படைக்க முன்னேறுதல், கல்வியில் சிறந்து விளங்க மனக்கட்டுப்பாடு, வெற்றி உங்களுக்கே...” என 5 கட்டங்களாக இந்த பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளன. பகவத் கீதை மற்றும் ஆன்மீகக் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு இந்த ஆளுமை மேம்பாட்டுப் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.

முன்பதிவு அவசியம்

இந்த பயிற்சி வகுப்பு நாளை (12.7.2026) ஞாயிற்றுக்கிழமை தொடங்க உள்ளது. ஞாயிறு தோறும் மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை, மொத்தம் 5 வாரங்கள் பயிற்சி வகுப்பு நடைபெறும்.

9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள், கல்லூரி மாணவர்கள் மட்டும் (மாணவிகள் அல்ல) இப்பயிற்சியில் சேரலாம். பயிற்சி கட்டணமாக 100 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பயிற்சியில் சேர விரும்பும் மாணவர்கள், https://forms.gle/CoZsb62PtvyrQ1RK9 என்ற லிங்கில் சென்று, தங்கள் பெயரை முன்பதிவு செய்யவேண்டும்.