பிள்ளையார்பட்டி:
பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலில் சதுர்த்தி விழா அடுத்த மாதம் 5-ம் தேதி தொடங்கி 14-ம் தேதி வரை நடைபெற உள்ளது.
வரலாற்று புகழ்மிக்க பிள்ளையர்பட்டி கற்பக விநாயகர் கோவிலில் விநாயகப் பெருமானுக்கு ஆண்டுதோறும் சதுர்த்தி விழா விமரிசையாக நடைபெறும். அவ்வகையில் இந்த ஆண்டின் சதுர்த்தி பெருவிழா அடுத்த மாதம் 5ம் தேதி காலையில் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. விழா நாட்களில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வாகனத்தில் சுவாமி வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளார். இதுதவிர பக்தி இசை நிகழ்ச்சிகள், ஆன்மிக சொற்பொழிவுகள், நாட்டிய நிகழ்ச்சிகள் என பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறும்.
முதல் நாள் இரவு 8.30 மணிக்கு மூஷிக வாகனத்தில் திருவீதி உலா வருவார். இரண்டாம் திருநாள் முதல் முதல் 8-ம் திருநாள் வரை தினமும் காலையில் விநாயகர் வெள்ளி கேடகத்தில் திருவீதி உலா வருகிறார். இரவு 8.30 மணிக்கு சிம்ம வாகனம், பூத வாகனம், கமல வாகனம், ரிஷப வாகனம், மயில் வாகனம், குதிரை வாகனம், யானை வாகனம் என தினமும் ஒவ்வொரு வாகனத்தில் விநாயகர் எழுந்தருளி திருவீதி உலா வருவார். திருவீதி உலாவில் ஒவ்வொரு நாளும் திருமறைப்பாராயணமும், திருமுறைப்பாராயணமும் நடைபெறும்.
10-ம் தேதி மாலை 5.00 மணிக்கு கஜமுக சூரசம்ஹாரம் நடைபெறும். 13-ம் தேதி சதுர்த்தி தேரோட்டம் நடைபெற உள்ளது. அன்றைய தினம் காலையில் அலங்கரிக்கப்பட்ட தேரில் விநாயகர் எழுந்தருள்வார். சிறப்பு பூஜைகளுக்கு பிறகு மாலையில் தேரோட்டம் நடைபெறும். மாலை 4.30 மணி முதல் இரவு 10.00 மணி வரை மூலவரான விநாயகர் சந்தன காப்பு அலங்காரத்தில் காட்சி அளிப்பார்.
14-ம் தேதி காலை 11.00 மணிக்கு கோவில் தெப்பக்குளத்தில் தீர்த்தவாரி உற்சவம் நடைபெறும். அதனை தொடர்ந்து விநாயகருக்கு முக்குறுணி மோதகம் படையலிடப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெறும்.