பூத்தட்டுகளை சுமந்தபடி ஊர்வலமாக வந்த பக்தர்கள் 
ஆன்மிகம்

தேவகோட்டை அருகே முத்துமாரியம்மன் கோவிலில் பூச்சொரிதல் விழா

அம்மனுக்கு அபிஷேகம் செய்வதற்காக விதவிதமான மலர்களை தட்டுகளில் வைத்து பக்தர்கள் ஊர்வலமாக கொண்டு வந்தனர்.

சிவகங்கை,

தேவகோட்டை அருகே கோட்டூர் கிராமத்தில் பல நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவிலில் பங்குனி முளைப்பாரி உற்சவ விழா நடைபெற்று வருகிறது. தினமும் காலை மற்றும் மாலை வேளையில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும் அலங்காரமும் நடைபெறுகிறது.

நேற்று இரவு பூச்சொரிதல் விழா நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் இதில் கலந்துகொண்டு பூத்தட்டுகளை சுமந்தபடி ஊர்வலமாக வந்தனர். கோட்டூர் நயினார்வயல் அகத்தீஸ்வரர் கோவிலில் இருந்து மேளதாளங்கள் முழங்க வாணவேடிக்கையுடன் புறப்பட்ட இந்த ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக வந்து கோவிலை அடைந்தது. பூதட்டுகள் சுமந்து வந்தவர்களுக்கு வழி நெடுகிலும் பிஸ்கட், சாக்லேட், லட்டு மற்றும் குளிர்பானங்களை மக்கள் வழங்கினர்.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பூதட்டு சுமந்து வந்து அம்மனுக்கு செலுத்தினார்கள். அந்த மலர்களால் அம்மனுக்கு அபிஷேகம் செய்து சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. பின்னர் பக்தர்களுக்கு தாம்பூலம், வளையல்கள் பிரசாதமாக வழங்கப்பட்டது.

நாளை 31ஆம் தேதி செவ்வாய்க்கிழமை காலை பால்குடம், காவடி எடுத்தலும், இரவு கோவில் வளாகத்தில் முளைப்பாரி வைத்தல் நிகழ்ச்சியும், நாளை மறுநாள் 1ந் தேதி புதன்கிழமை காலை முளைப்பாரி செலுத்துதல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. இதைத்தொடர்ந்து மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதில், சிறந்த மாட்டின் உரிமையாளர் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கு தங்க காசுகள், வெள்ளி காசுகள், சைக்கிள், பீரோ, அண்டா, மின் சாதன பொருட்கள் என பல்வேறு பரிசுப்பொருட்கள் வழங்கப்படுகின்றன.