திருப்பதி,
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒவ்வொரு பவுர்ணமி அன்றும் இரவு கருடசேவை நடைபெறும். தங்கக் கருட வாகனத்தில் உற்சவர் மலையப்ப சுவாமி எழுந்தருளி மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.
அவ்வகையில் வைகாசி மாத பெளர்ணமியையொட்டி நேற்று திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தங்கக் கருட வாகன வீதிஉலா நடந்தது. அதையொட்டி பலவண்ண மலர்களாலும், நவரத்தினங்கள் பதிக்கப்பட்ட தங்க ஆபரணங்களாலும் அலங்கரிக்கப்பட்ட உற்சவர் மலையப்ப சுவாமி, தங்க கருட வாகனத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
நேற்று இரவு 7 மணி முதல் 9 மணி வரை இந்நிகழ்ச்சி நடைபெற்றது. மாட வீதிகளில் திரண்டிருந்த பக்தர்கள் ‘கோவிந்தா.. கோவிந்தா..’ என பக்தி முழக்கம் எழுப்பியபடி பகவானை தரிசனம் செய்தனர்.
திருமலை சின்ன ஜீயர் சுவாமிகள், தேவஸ்தான நிர்வாகக் குழு உறுப்பினர் சாந்தாராம், இணை நிர்வாக அதிகாரி டாக்டர் சரத் மற்றும் பிற அதிகாரிகள் மற்றும் பக்தர்கள் பங்கேற்றனர்.