புஷ்ப யாகம் (கோப்பு படம்) 
ஆன்மிகம்

கல்யாண வெங்கடேஸ்வரர் கோவிலில் புஷ்ப யாகம்.. டிக்கெட் கட்டணம் ரூ.516

வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடந்து முடிந்த நிலையில், பாரம்பரிய முறைப்படி புஷ்ப யாகத்திற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

திருப்பதி:

திருப்பதி அருகே உள்ள சீனிவாசமங்காபுரம் கல்யாண வெங்கடேஸ்வரர் கோவிலில் வரும் 15-ம் தேதி புஷ்ப யாகம் நடைபெற உள்ளது.

பிரம்மோற்சவ நிகழ்ச்சிகளின்போது அர்ச்சகர்கள், அதிகாரிகள், ஊழியர்கள் அல்லது பக்தர்களால் தெரிந்தோ தெரியாமலோ குறைகள் ஏதேனும் ஏற்பட்டிருக்கலாம். அந்த குறைகளால் ஏற்பட்ட தோஷங்களுக்கு பரிகாரமாக புஷ்ப யாகம் செய்யப்படுவது வழக்கம். இந்த புனித சடங்குகளை செய்வதன் மூலம், தோஷங்கள் நீங்கும் என்று நம்பப்படுகிறது.

அவ்வகையில், கடந்த மாதம் 8ம் தேதி தொடங்கி 16-ம் தேதி வரை வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடைபெற்ற நிலையில், பாரம்பரிய முறைப்படி புஷ்ப யாகத்திற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக வரும் 14ம் தேதி (14.3.2026) சேனாதிபதி உற்சவம் மற்றும் அங்குரார்ப்பணம் நடைபெறுகிறது.

மறுநாள் 15-ம் தேதி காலை 10 மணி முதல் 11 மணி வரை உற்சவ மூர்த்திகளான கல்யாண வெங்கடேஸ்வரர், ஸ்ரீதேவி, பூதேவி ஆகியோருக்கு ஸ்நாபன திருமஞ்சனம் நடைபெறுகிறது. பால், தயார், தேன், மஞ்சள், சந்தன கலவை, இளநீர் ஆகிய திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்படுகிறது.

மதியம் 2 மணி முதல் 4 மணி வரை புஷ்பயாகம் நடைபெறுகிறது. அப்போது துளசி, கிரிஸான்தமம், ஒலியாண்டர், மல்லிகை, சம்பங்கி, ரோஜா மற்றும் தாமரை உள்ளிட்ட பல்வேறு மலர்களை பகவானுக்கு சமர்ப்பித்து புஷ்பயாகம் நிகழ்த்தப்படுகிறது. மாலை5.30 மணிமுதல் 6.30 மணி வரை உற்சவர்கள் மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்கள்.

புஷ்பயாகத்தில் பங்கேற்பதற்கான டிக்கெட்டுகள் மார்ச் 14ம் தேதி முதல் கோவிலில் கிடைக்கும். ஒரு டிக்கெட் விலை ரூ.516. இதில் இரண்டு பேர் புஷ்பயாகத்தில் பங்கேற்கலாம். புஷ்பயாகத்தை முன்னிட்டு, மார்ச் 15 அன்று நித்ய கல்யாணோற்சவ சேவை ரத்து செய்யப்படுவதாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

Also read:திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவில்