சிறுவாபுரி,
சிறுவாபுரி முருகன் கோவிலில் ரூ.1 கோடி உண்டியல் காணிக்கையாக பெறப்பட்டுள்ளது.
சிறுவாபுரியில் உள்ள பாலசுப்பிரமணியசுவாமி கோவில் சிறப்பு பெற்றது. இந்த கோவிலில் 6 வாரங்கள் வந்து நெய்தீபம் ஏற்றி வழிபட்டால் பக்தர்களின் வேண்டுதல்கள் நிறைவேறும் என்பது நம்பிக்கையாக இருந்து வருகிறது. மேலும் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் அலை மோதும். இந்த நிலையில் கடந்த 68 நாட்களுக்குப் பிறகு சிறுவாபுரி கோவிலில் உள்ள உண்டியல்களில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய பணம் எண்ணப்பட்டது.
மொத்தம் உள்ள 12 உண்டியல்கள் திறக்கப்பட்டு கோவில் வளாகத்தில் நேற்று காலை முதல் இரவு வரை எண்ணப்பட்டது. பெரியபாளையம் பவானி அம்மன் கோவிலின் துணை ஆணையர் கார்த்திகேயன் தலைமை தாங்கினார். உதவி ஆணையர் சிவஞானம், ஆய்வாளர் முருகன் ஆகியோர் முன்னிலையில் கோவில் பணியாளர்கள், பொதுமக்கள் உண்டியல் காணிக்கை பணத்தை எண்ணும் பணியில் ஈடுபட்டனர். இதில் மொத்தம் ரூ.1கோடியே 10 லட்சத்து 91 ஆயிரத்து 335 ரொக்கமாகவும், தங்கம் 69.270 கிராமும் வெள்ளி 7 கிலோ 158 கிராமும் காணிக்கையாக பக்தர்கள் செலுத்தி இருந்தனர் என்று கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்து உள்ளனர்.