திருவனந்தபுரம்,
புரட்டாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை இன்று திறக்கப்பட்டுள்ளது.
கேரள மாநிலம் சபரிமலையில் உலகப்புகழ்பெற்ற இந்து மதக்கடவுள் அய்யப்பன் கோவில் உள்ளது.
இதனிடையே, ஓணம் பண்டிகை சிறப்பு வழிப்பாட்டிற்காக கடந்த மாதம் 24ம் தேதி முதல் 28ம் தேதி வரை சபரிமலை அய்யப்பன் கோவில் நடை திறக்கப்பட்டது. அதன்பின்னர் கோவில் நடை அடைக்கப்பட்டது.
இந்நிலையில், புரட்டாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை இன்று திறக்கப்பட்டுள்ளது. இன்று மாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்ட நிலையில் நாளை முதல் புரட்டாசி மாத பூஜைகள் நடைபெற உள்ளது.
வரும் 21-ம் தேதி வரை புரட்டாசி மாத பூஜையை தந்திரி கண்டரரு பிரம்மதத்தன் முன்னிலையில் மேல்சாந்தி பிரசாத் நம்பூதிரி நடத்துகிறார். இந்த நாட்களில் படி பூஜை உள்பட சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளது. புரட்டாசி மாத பூஜைக்கான தரிசன ஆன்லைன் முன்பதிவு நடைபெற்று வருகிறது. பக்தர்கள் வழக்கம்போல் ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.