திருப்பதி,
சீனிவாசமங்காபுரம் கல்யாண வெங்கடேஸ்வர சுவாமி கோவிலில் ஆண்டு தோறும் சாக்ஷாத்கார வைபவோற்சவம் நடத்தப்படும். மூன்று நாட்கள் இவ்விழா நடைபெறும். அவ்வகையில் இந்த ஆண்டின் சாக்ஷாத்கார வைபவோற்சவம் கடந்த 17-ம் தேதி தொடங்கியது. விழாவில் சிறப்பு பூஜைகள், ஸ்நாபன திருமஞ்சனம், ஊஞ்சல் சேவை, பல்வேறு வாகன சேவைகள் மற்றும் பக்தி இசை, கலாச் சார நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
முதல் நாளில் கல்யாண வெங்கடேஸ்வர சுவாமி பெரிய சேஷ வாகனத்தில் எழுந்தருளி அருள்பாலித்தார். இரண்டாம் நாளில் அனுமந்த வாகனத்தில் எழுந்தருளினார்.
நிறைவு நாளான நேற்றைய வழிபாட்டு நிகழ்வுகள் சுப்ரபாதத்துடன் தொடங்கின; அதனைத் தொடர்ந்து தோமாலை சேவை, கொலு, பஞ்சாங்க சிரவணம் மற்றும் சகஸ்ரநாமார்ச்சனை ஆகியவை நடைபெற்றன. அதன்பின், காலை 10 மணி முதல் 11 மணி வரை கல்யாண மண்டபத்தில் உற்சவ மூர்த்திகளுக்குப் பால், தயிர், தேன், மஞ்சள், சந்தனக் கலவை மற்றும் இளநீர் ஆகியவற்றைக் கொண்டு ஸ்நாபன திருமஞ்சனம் நடைபெற்றது. இந்நிகழ்வுகளில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.
மாலையில் ஊஞ்சல் சேவை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து இரவு 7 மணிக்கு கருட சேவை நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட கருட வாகன ஊர்வலத்தில் எழுந்தருளிய பகவான், மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இந்நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் பங்கேற்று பகவானை தரிசனம் செய்தனர்.
ஸ்ரீவாரி மெட்டு அருகே உள்ள பாரிவேட்டை மண்டபத்தில் இன்று காலை பாரிவேட்டை உற்சவமும், அதைத் தொடர்ந்து சிறப்பு ஆஸ்தானமும் நடைபெற்றது.
விழாவில் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் சிறப்பு நிலை துணை செயல் அலுவலர் வரலட்சுமி, கூடுதல் செயல் அலுவலர் கோபிநாத், கண்காணிப்பாளர் ராஜ்குமார், கோயில் ஆய்வாளர் முனிகுமார், ஆர்ஜிதம் இன்ஸ்பெக்டர் தனசேகர், அர்ச்சகர்கள், அதிகாரிகள் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.