திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தங்கத் தேரோட்டம் 
ஆன்மிகம்

வசந்த உற்சவம்... தங்கத்தேரில் எழுந்தருளி அருள்பாலித்த மலையப்ப சுவாமி

தங்கத்தேரில் எழுந்தருளி மாட வீதிகளில் வலம் வந்த மலையப்ப சுவாமியை திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

திருமலை,

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வசந்த காலத்தில் மூன்று நாட்கள் உற்சவம் கோலாகலமாக நடைபெறும். அவ்வகையில் இந்த ஆண்டின் வசந்த உற்சவம் நேற்று கோலாகலமாக தொடங்கியது.

முதல் நாள் காலையில் உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமி கோவிலின் நான்கு மாடவீதிகளில் ஊர்வலமாக வந்து, பின்னர் வசந்த உற்சவ மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு அபிஷேகம், நைவேத்தியம் முடிந்தபின் மீண்டும் கோவிலுக்கு திரும்பினார்.

2-வது நாளான இன்று தங்கத் தேரோட்டம் நடைபெற்றது. காலை 8 முதல் 10 மணி வரை ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமி தங்கத்தேரில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின்னர் வசந்த மண்டபத்தை அடைந்தார். அங்கு, அர்ச்சகர்கள் வசந்த உற்சவத்தை நடத்தினார்கள். இந்நிகழ்ச்சிகளில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தங்கத் தேரோட்டம்

வசந்த உற்சவத்தின் நிறைவு நிகழ்ச்சிகள் நாளை (ஏப்ரல் 1) நடைபெறுகின்றனு. நாளை உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமி, சீதா, ராமர், லட்சுமணர், ஆஞ்சநேயர், ஸ்ரீகிருஷ்ணர் தனித்தனி தங்கத்திருச்சி வாகனங்களில் கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து வசந்த மண்டபத்தை அடைகிறார்கள். அங்கு உற்சவர்களுக்கு ஸ்நாபன திருமஞ்சனம் எனப்படும் அபிஷேகம் நடக்கிறது.

அதன்பிறகு மாலை நேரத்தில் வசந்த மண்டபத்தில் இருந்து புறப்பட்டு கோவிலை அடைகின்றனர்.