மயிலாடுதுறை,
மயிலாடுதுறை கூறைநாட்டில் உள்ள தாகம் தீர்த்த விநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தியையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி விநாயகப்பெருமானுக்கு பால், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள் பொடி, திரவிய பொடி உள்ளிட்ட பொருள்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் அருகம்புல் மாலை, மலர் மாலை அணிவித்து விநாயகர் அகவல் பாராயணம் செய்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
தொடர்ந்து விநாயகப்பெருமானுக்கு படைக்கப்பட்ட கொழுக்கட்டைகள் மற்றும் கொண்டக்கடலை ஆகியவை பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. சிறப்பு பூஜையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இதேபோல் மயிலாடுதுறையில் உள்ள சித்தி விநாயகர் கோவில், வெற்றி விநாயகர் கோவில், தாமோதர விநாயகர் கோவில், கண்கொடுத்த பிள்ளையார் கோவில், மங்கள விநாயகர் கோவில், செல்வவிநாயகர் கோவில் உள்ளிட்ட கோவில்களிலும் சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.