நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் 
ஆன்மிகம்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் சனி மகா பிரதோஷ வழிபாடு

தொடர் விடுமுறை நாட்கள் என்பதால் அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நேற்று சனி மகா பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி கோவிலில் உள்ள சிறிய நந்தி, அதிகார நந்தி, ஆயிரங்கால் மண்டபம் அருகில் உள்ள பெரிய நந்தி உள்ளிட்ட நந்தி பகவான்களுக்கு பால், பன்னீர், இளநீர், தேன், பஞ்சாமிர்தம், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு மங்கள வாத்தியங்கள் முழங்க தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தொடர்ந்து உண்ணாமலை அம்மன் சமேத அருணாசலேஸ்வரர் சிறப்பு அலங்காரத்தில் நந்தி வாகனத்தில் எழுந்தருளி பிரகார உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

பக்தர்கள் வருகை அதிகரிப்பு

தொடர் விடுமுறை நாட்கள் என்பதால் நேற்று அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது. பக்தர்கள் கோவிலில் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

இதேபோல் வந்தவாசி ஜலகண்டேஸ்வரர் கோவிலில் சனி பிரதோஷ வழிபாடு நடந்தது. நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம், தங்க கவச அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.