சோழவந்தான்,
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே விக்கிரமங்கலம் இந்து நாடார் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட பத்திரகாளியம்மன் கோவில் வைகாசி பொங்கல் திருவிழா விமரிசையாக நடைபெற்றது. திருவிழாவின் முதல் நாள் விநாயகர் பூஜை நடைபெற்றது. மாலையில் நந்தவனத்தில் தேவியை சிவபூஜை செய்து அலங்கரித்தல், இதைத் தொடர்ந்து பூசாரி வீட்டில் இருந்து கோவில் பெட்டியை கோவிலுக்கு எடுத்து வருதல், இரவு சக்தி கரகம், முளைப்பாரி எடுத்து வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இரண்டாம் நாள் அதிகாலை கருப்பு சாமிக்கு படையல் படைத்து சிறப்பு பூஜையும் பிரசாதமும் வழங்கப்பட்டது. இதை தொடர்ந்து காளியம்மன் கருப்புசாமி மற்றும் பரிவார தெய்வங்களுக்கு பூஜை நடைபெற்றது. பக்தர்கள் பால்குடம், அக்னி சட்டி எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். மாலையில் உலக நன்மைக்காக திருவிளக்கு பூஜை நடைபெற்று, மாவிளக்கு ஊர்வலம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.