அமாவாசை என்பது முன்னோர்களின் ஆசீர்வாதத்தை பெறுவதற்கான புனிதமான நாள் என சாஸ்திரங்களில் சொல்லப்பட்டுள்ளது. அன்றைய தினம் முன்னோர்களை நினைவில் கொண்டு செய்யும் திதி, தர்ப்பணம், வழிபாடு என அனைத்தும் அவர்களை திருப்தி செய்வதுடன், அவர்களின் ஆசியையும் பெற வழிவகுக்கும். எனவே, சாஸ்திர சம்பிரதாயங்களில் நம்பிக்கை உள்ளவர்கள், அமாவாசை நாட்களில் புனித தலங்களில் நீராடி, முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபடுகிறார்கள்.
அவ்வகையில் ஆனி அமாவாசை தினமான இன்றும் முக்கிய புனித தலங்களில் மக்கள் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபடுகிறார்கள்.
இந்த நாளில் தர்ப்பணம் செய்தால் புண்ணியம் கிடைக்கும்; பித்ருக்களின் தோஷம் அகலும் என்பது ஐதீகம். நீர்நிலைகளுக்கு சென்று தர்ப்பணம் செய்ய இயலாதவர்கள், வீட்டில் குல தெய்வம், முன்னோர்களின் படங்களுக்கு மலர்கள் சாற்றி, தீப தூபம் காட்டி வழிபடுகிறார்கள். இன்று முன்னோரை வழிபட்டு ஏழைகளுக்கு அன்னதானம், பசுக்களுக்கு அகத்திக்கீரை கொடுப்பதன்மூலம் குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும் என்பது நம்பிக்கை.
அதுவும் இந்த அமாவாசை தினமானது முருகப்பெருமானுக்குரிய செவ்வாய்க்கிழமையில் வருவது மிகவும் சக்தி வாய்ந்த நாளாக கருதப்படுகிறது. இன்றைய தினம் முருகப்பெருமானை வழிபட்டால் அஞ்ஞானம் நீங்கி, தடைகள் விலகி, வாழ்க்கையில் வெற்றி மற்றும் வளம் பெருகும் என்பது ஐதீகம்.
செவ்வாய்- வீரமும், ஆற்றலும், துணிவும் தரும் கிரகம்
அமாவாசை - பித்ரு தர்ப்பணம் செய்ய உகந்த திதி
செவ்வாயும் அமாவாசையும் சேரும்போது பாவங்கள் நீங்கும், துன்பங்கள் தீரும்.
முருகப்பெருமானின் அருள் நிறைந்து கிடைக்கும் நாள்
கடன், நோய், தடை, பகை எதிரி தொல்லை நீங்கும்.
கடன் சுமை குறைந்து பொருளாதார நிலை மேம்படும்
நோய்கள் நீங்கி, உடல் ஆரோக்கியம் மேம்பட்டு, மனவலிமை கிடைக்கும்.
செய்யும் செயலில் வெற்றி கிடைக்கும், எதிரிகள் தோல்வியடைவர்,
மன அமைதி, ஞானம், பக்தி அதிகரித்து வாழ்க்கை உயர்வடையும்.