சிங்கப்பூர் மாரியம்மன் கோவில் 
ஆன்மிகம்

சிங்கப்பூர் மாரியம்மன் கோவில்

சிங்கப்பூர் இந்து அறக்கட்டளை வாரியத்தால் மாரியம்மன் கோவில் நிர்வகிக்கப்படுகிறது.

சிங்கப்பூரில் பழமையான, புகழ்பெற்ற இந்து கோவில்களில் ஒன்று, ஸ்ரீ மாரியம்மன் கோவில். இது சிங்கப்பூரின் சைனா டவுன் பகுதியில் சவுத் பிரிட்ஜ் சாலையில் அமைந்திருக்கிறது. இந்தக் கோவில் 1973-ம் ஆண்டு, சிங்கப்பூரின் தேசிய நினைவுச் சின்னமாக அந்நாட்டு அரசால் அறிவிக்கப்பட்டது.

தமிழ்நாட்டின் நாகப்பட்டினம், கடலூர் போன்ற இடங்களில் இருந்து சிங்கப்பூர் சென்ற தமிழ் மக்களின் துணையோடு 1827-ம் ஆண்டு மாரியம்மன் கோவில் கட்டப்பட்டது. இங்கு மாரியம்மனை முதல் தெய்வமாகவும், மூலஸ்தான தெய்வமாகவும் அமைத்துள்ளார்கள்.

இக்கோவில் உருவாக காரணமாக இருந்தவர் நாராயணபிள்ளை என்பவர் ஆவார். 1822-ம் ஆண்டு முதன்முதலாக, கோவில் அமைப்பதற்கான நிலத்தை வழங்க அந்நாளைய கிழக்கிந்திய கம்பெனி முன்வந்தது. சவுத் பிரிட்ஜ் சாலையில் கோவில் கட்ட அனுமதி தரப்பட்டது.

புதுப்பொலிவுடன் மாரியம்மன் கோவில்

1827-ம் ஆண்டு, கோவிலின் அடித்தளப்பணி ஆரம்பிக்கப்பட்டது. கடலூரைச் சேர்ந்த ஒருவர் தம்முடன் எடுத்து வந்த அம்மன் சிலையை, மரப்பலகை, கூரையுடன் கூடிய சிறு குடில் அமைத்து சின்ன அம்மன் என்ற பெயரில் பிரதிஷ்டை செய்து வழிபாடு தொடங்கப்பட்டது.

1862-ம் ஆண்டு இந்தக் கோவில், முழுமையான செங்கல் கட்டிடமாக மாற்றப்பட்டது. தற்போது இங்குள்ள மூலவரான பெரிய அம்மன், எப்போது இக்கோவிலுக்கு கொண்டு வரப்பட்டது என்பதற்கான ஆதாரம் இல்லை.

அதன்பின் சுமார் 100 ஆண்டுகள் மாற்றமின்றி இருந்த ஆலயம், 1962-ல் மாற்றம் செய்யப்பட்டது. புதுப்பொலிவுடன் நவீன வசதிகளுடன் திருமண மண்டபம், அரங்கம் போன்றவையும் கட்டப்பட்டன. சிங்கப்பூர் இந்து அறக்கட்டளை வாரியத்தால் இந்த ஆலயம் நிர்வகிக்கப்படுகிறது.

சீனர்கள் வழிபடும் அம்மன்

ஆங்கிலேய ஆட்சிக் காலத்தில் தமிழ்நாட்டில் இருந்து சிங்கப்பூருக்கு வேலை தேடி வரும் தமிழர்களுக்கு ஆதரவு அளிக்கும் இடமாகவும் இந்த மாரியம்மன் கோவில் திகழ்ந்துள்ளது. வாழ்வாதாரம் தேடுவோருக்கு ஒரு நிலையான தொழில், வேலை அமையும் வரை இக்கோவிலில் தங்கியிருக்க அனுமதி அளித்துள்ளனர்.

இக்கோவில், சீனர்கள் அதிகம் வாழும் பகுதியில் அமைந்திருக்கும் காரணத்தால் சுற்றுப்புறத்திலிருக்கும் சீனர்களும் பெருமளவில் இங்கு வந்து வழிபடுகிறார்கள். ஆண்டுதோறும் நடக்கும் தீமிதி விழாவில் சீனர்கள் மிகுதியாகப் பங்கு பெறுகிறார்கள். கோவில் திருப்பணிகளுக்கு நிதியுதவி வழங்குகிறார்கள்.

SCROLL FOR NEXT