சிவ-பார்வதி திருக்கல்யாண உற்சவம் 
ஆன்மிகம்

பிரம்மோற்சவ விழா.. திருப்பதி கபிலேஸ்வரர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்

திருக்கல்யாண உற்சவத்தைத் தொடர்ந்து திருச்சி வாகன வீதிஉலா நடந்தது.

திருப்பதி:

திருப்பதி கபிலேஸ்வரர் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது. விழாவின் 9-வது நாளான நேற்று காலை 8 மணியில் இருந்து 10 மணிவரை உற்சவர்களான சோமாஸ்கந்த மூர்த்தி, காமாட்சி தாயார் சிறப்பு அலங்காரத்தில் புருஷாமிருக வாகனத்தில் எழுந்தருளி திருப்பதி நகர வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

வாகன வீதிஉலாவிற்கு முன்னால் பெண்கள் நடனம் ஆடினர். கேரள செண்டை மேளம் மற்றும் மங்கள இசை வாத்தியங்கள் இசைக்கப்பட்டன. வழி நெடுகிலும் பக்தர்கள் தேங்காய் உடைத்தும், கற்பூரம் ஏற்றி தீபாராதனை காண்பித்தும் சாமி தரிசனம் செய்தனர்.

கோவிலில் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் நேற்று அதிகாலை 4 மணி வரை ‘லிங்கோத்பவ தரிசனம்' நடந்தது. தொடர்ந்து சுப்ரபாதத்துக்கு பின் மூலவருக்கும், உற்சவர்களுக்கும் அபிஷேகம் நடத்தப்பட்டது. காலை 8 மணியளவில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர். காலை 11 மணியளவில் உற்சவர்களுக்கு ஸ்நாபன திருமஞ்சனம் நடந்தது.

மாலை 6 மணியில் இருந்து இரவு 7.30 மணிவரை திருக்கல்யாண உற்சவம், இரவு 8 மணியில் இருந்து 10 மணிவரை திருச்சி வாகன வீதிஉலா நடந்தது.

மேற்கண்ட நிகழ்ச்சிகளில் கோவில் மேற்பார்வையாளர் சந்திரசேகர் மற்றும் அர்ச்சகர்கள், அதிகாரிகள், பக்தர்கள் பங்கேற்றனர்.

சீனிவாசமங்காபுரம்

அதேபோல் திருப்பதியை அடுத்த சீனிவாசமங்காபுரத்தில் உள்ள கல்யாண வெங்கடேஸ்வரர் கோவிலில் நடந்து வரும் வருடாந்திர பிரம்மோற்சவ விழாவின் 9-வதுநாளான நேற்று காலை 9.55 மணியில் இருந்து 10.15 மணிவரை சக்கரஸ்நானம் எனப்படும் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடந்தது.

பின்னர் மாலை 6 மணியில் இருந்து இரவு 7 மணிவரை கொடியிறக்க நிகழ்ச்சி நடந்தது. இதோடு பிரம்மோற்சவ விழா நிறைவடைந்தது.

Also read:மகா சிவராத்திரி: திருவண்ணாமலை கோவிலில் பக்தர்கள் விடிய, விடிய சாமி தரிசனம்