திருமலை,
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் உறியடி உற்சவம் நடந்தது. அதில் உள்ளூர் இளைஞர்கள் பலர் பங்கேற்றனர்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று முன்தினம் கோகுலாஷ்டமி விழா மற்றும் ஆஸ்தானம் நடந்தது. அதன் ஒரு பகுதியாக நேற்று பாரம்பரிய முறைப்படி உறியடி உற்சவம் நடத்தப்பட்டது. உற்சவர் மலையப்ப சுவாமி தங்கத்திருச்சி வாகனத்தில் எழுந்தருளினார். அதேபோல் ஸ்ரீகிருஷ்ணர் மற்றொரு திருச்சி வாகனத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
முதலில் மலையப்ப சுவாமி, ஸ்ரீகிருஷ்ணர் மேள, தாளம் மற்றும் மங்கள வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக பெரிய ஜீயர் மடத்துக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு, உற்சவர்களுக்கு ஆஸ்தானம் நடந்தது.
இதையடுத்து பெரிய ஜீயர் மடத்தில் இருந்து உற்சவர்கள் ஊர்வலமாக கோவில் முன்பு கொண்டு வரப்பட்டனர். உற்சவர்கள் முன்னிலையில் உறியடி உற்சவம் மாலை முதல் இரவு வரை கோலாகலமாக நடந்தது.
அதில் கோவில் அருகே பாலாஜி நகர் பகுதியில் வசிக்கும் உள்ளூர் மக்கள், பக்தர்கள், இளைஞர்கள் பலர் கலந்து கொண்டு உறியடித்தனர். அதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
உறியடி உற்சவத்தில் திருமலை பெரிய ஜீயர் சுவாமிகள், சின்ன ஜீயர் சுவாமிகள், தேவஸ்தான கூடுதல் அதிகாரி வெங்கையா சவுத்ரி, கோவில் துணை அதிகாரி (பொறுப்பு) பாஸ்கர் உள்பட கலந்து கொண்டனர்.
இதேபோல் திருச்சானூரில் உள்ள ஸ்ரீ கிருஷ்ண சுவாமி கோவிலில் உறியடி உற்சவம் நடைபெற்றது. ஸ்ரீ பத்மாவதி தாயார் கோவிலின் நிர்வாகத்தின் கீழ் உள்ள இக்கோவிலில், நாள் முழுவதும் சிறப்பு வழிபாட்டு நிகழ்வுகள் நடைபெற்றன. காலையில் சுப்ரபாத சேவையுடன் பகவானைத் துயிலெழுப்பும் நிகழ்வு நடைபெற்றது; அதனைத் தொடர்ந்து மூலவருக்குச் சகஸ்ரநாமார்ச்சனை மற்றும் அபிஷேகம் செய்யப்பட்டன.
மதியம் 3 மணி முதல் 4 மணி வரை உற்சவ மூர்த்திகளுக்கு ஸ்நபன திருமஞ்சனமும், அதைத் தொடர்ந்து ஊஞ்சல் சேவையும் நடைபெற்றன. மாலை 6 மணி முதல் 7.30 மணி வரை உறியடி உற்சவம் மற்றும் ஆஸ்தானம் ஆகியவை விமரிசையாக நடத்தப்பட்டன.
இந்நிகழ்ச்சிகளில் திரளான பக்தர்கள் பங்கேற்று, ஸ்ரீ கிருஷ்ணரை தரிசனம் செய்ததுடன், கொண்டாட்டங்களைக் கண்டு ரசித்தனர்.
கோவில் உதவி நிர்வாக அதிகாரி தேவராஜுலு, கோவில் ஆய்வாளர் சலபதி, அர்ச்சகர்கள், பணியாளர்கள் மற்றும் ஏராளமான பக்தர்கள் இவ்விழாவில் கலந்துகொண்டனர்.