திருப்பதி,
திருச்சானூரில் பிரசித்தி பெற்ற பத்மாவதி தாயார் கோவிலில் இந்த ஆண்டுக்கான தெப்பத்திருவிழா கடந்த 25-ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.
விழாவின் நான்காம் நாளான நேற்று கோவில் தெப்பக்குளமான பத்ம சரோவரத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த தெப்பத்தில், பத்மாவதி தாயார் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி தெப்பக்குளத்தில் 5 முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இந்த கண்கொள்ளா காட்சியை கண்டு தரிசிக்க ஆயிரக்கணக்கான பக்தர்கள் தெப்பக்குளத்தின் நான்கு புறமும் திரண்டனர். அவர்கள் தெப்பத்தில் பவனி வந்த தாயாரை கண்குளிர கண்டு பக்தி பரவசத்துடன் தரிசனம் செய்தனர்.
முன்னதாக தாயாருக்கு நறுமணப் பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தெப்பத்தில் பவனி வந்த தாயார், பின்னர் 4 மாட வீதிகளிலும் கஜ வாகனத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
விழாவில் திருமலை திருப்பதி தேவஸ்தான இணை நிர்வாக அதிகாரி டாக்டர் ஏ.ஷரத், துணை நிர்வாக அதிகாரி ஹரிநாத், கோவில் அதிகாரிகள், அர்ச்சகர்கள், ஸ்ரீவாரி சேவகர்கள் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
தெப்ப உற்சவம் இன்றுடன் நிறைவு பெறுகிறது. இன்று இரவு பத்மாவதி தாயார் தெப்பத்தில் எழுந்தருளி 7 முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளார். அதன்பின் கருட வாகனத்தில் எழுந்தருளி மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளார்.