திருமலை:
திருமலையில் ஒவ்வொரு ஆண்டும் நாராயணகிரி தோட்டத்தில் அமைந்துள்ள பரிணய உற்சவ மண்டபத்தில் பத்மாவதி சீனிவாச பரிணய உற்சவம் 3 நாட்கள் நடப்பது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான பத்மாவதி சீனிவாச பரிணய உற்சவம் 25ஆம் தேதி திருமலையில் உள்ள நாராயணகிரி தோட்டத்தில் தொடங்கியது.
பரிணய உற்சவம் நடக்கும் மண்டபம் பல வண்ண மலர்களால் பூலோக வைகுண்டத்தைபோல் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. அந்த மண்டபம் மகாவிஷ்ணு, கஜலட்சுமி, தாமரையில் மகாவிஷ்ணு, கோபால கிருஷ்ணர், அஷ்டலட்சுமி வடிவங்கள் ஆகியவற்றை பிரதிபலிக்கும் மின்விளக்கு அலங்காரங்கள் பக்தர்களை கவரும் வகையில் செய்யப்பட்டிருந்தன.
வைசாக சுத்த நவமி நாளான முதல் நாளில் மலையப்பசுவாமி கஜ (யானை) வாகனத்தில் எழுந்தருள, உபயநாச்சியார்கள் தனிப் பல்லக்கில் எழுந்தருள மேள, தாளம் மற்றும் மங்கள வாத்தியங்கள் இசைக்க ஊர்வலமாக ஏழுமலையான் கோவிலில் இருந்து பரிணய உற்சவ மண்டபத்தை அடைந்தனர். அங்கு ஆஸ்தானம், ஊஞ்சல் சேவை ஆகியவை நடந்தன. அனைத்து நிகழ்ச்சிகளும் முடிந்ததும் உற்சவர்கள் நாராயணகிரி தோட்டத்தில் இருந்து கோவிலுக்கு திரும்பினர்.
இதேபோல் 2-வது நாளில் மலையப்ப சுவாமி குதிரை வாகனத்திலும், உபய நாச்சியார்கள் தனி பல்லக்கிலும் உற்சவ மண்டபத்தை அடைந்தனர். அங்கு பரிணய உற்சவம் மிகச் சிறப்பாக நடத்தப்பட்டது.
பரிணய உற்சவத்தின் மூன்றாவது மற்றும் நிறைவு நாளான நேற்று கருட வாகனத்தில் மலையப்ப சுவாமி புறப்பட்டு உற்சவ மண்டவத்திற்கு வந்தார். உபயநாச்சியார்கள் தனித்தனி பல்லக்குகளில் வந்தனர்.
உற்சவ மண்டபத்தில் முதல் இரண்டு நாட்களைப் போலவே, பாரம்பரியத் திருமண சடங்குகள் மிகச் சிறப்பாக நடத்தப்பட்டன. அதனைத் தொடர்ந்து கொலு நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர், ரிக், யஜூர், சாம மற்றும் அதர்வண வேதங்கள் ஓதப்பட்டன.
அன்னமாச்சார்யா திட்ட கலைஞர்புல்லம்மா தலைமையிலான குழுவினர், மங்கல இசையுடனும் வாத்திய இசை நிகழ்ச்சிகளுடனும், அன்னமாச்சார்யரின் சங்கீர்த்தனங்களை பாடினர்.
பின்னர், பகவான் தம் தேவியருடன் நாராயணகிரி தோட்டத்தில் இருந்து ஊர்வலமாக திரும்பி கோவிலுக்குள் எழுந்தருளினார். இதன் மூலம் மூன்று நாட்கள் நடைபெற்ற இந்த திருவிழா நேற்று மாலையில் நிறைவுபெற்றது.