திருப்பதி,
திருச்சானூரில் சுந்தரராஜ சுவாமி அவதார மகோற்சவம் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது.
திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவில் வளாகத்தில் சுந்தரராஜ சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் சுந்தரராஜ சுவாமி அவதார மகோற்சவம் 3 நாட்கள் கொண்டாடப்படுகிறது. இந்த மகோற்சவம் ஒவ்வொரு ஆண்டும் திருமலை-திருப்பதி தேவஸ்தானம் சார்பில் நடப்பது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு சுந்தரராஜ சுவாமி அவதார மகோற்சவம் நேற்று பக்தி பரவசத்துடன் தொடங்கியது.
மகோற்சவத்தையொட்டி சுவாமிக்கு பால், தயிர், தேன், இளநீர், மஞ்சள், சந்தனம் உள்ளிட்ட புனிதப் பொருட்களால் மகா அபிஷேகமும், பலவண் ணமலர்களால் அலங்காரமும் செய்யப்பட்டது. அதன்பிறகு மகா தீப ஆராதனை காண்பிக்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து ஸ்ரீதேவி, பூதேவி சமேத சுந்தரராஜ சுவாமிக்கு ஊஞ்சல் சேவை நடந்தது. மாலை உற்சவர்கள் பெரிய சேஷ வாகனத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். மாடவீதிகளில் திரண்டிருந்த பக்தர்கள் ‘கோவிந்தா’ கோஷம் எழுப்பி பகவானை தரிசனம் செய்தனர்.
இந்த விழாவில் கோவில் துணை அதிகாரி ஹரிந்திரநாத், உதவி அதிகாரி தேவராஜூலு, கோவில் ஆய்வாளர் சலபதி, அர்ச்சகர் பாபுசுவாமி மற்றும் கோவில் அதிகாரிகள், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
மகோற்சவத்தின் 2-வது நாளான இன்று (திங்கட்கிழமை) இரவு அனுமந்த வாகன சேவை நடக்கிறது.
அந்நியர் படையெடுப்பால் பாதுகாப்பு கருதி மதுரை அழகர்கோவிலில் இருந்து உற்சவர் சுந்தரராஜ சுவாமியை திருச்சானூருக்கு கொண்டு வந்தனர். அந்த வரலாற்றுச் சிறப்பை நினைவுகூரும் வகையில் சுந்தரராஜ சுவாமி அவதார மகோற்சவம் ஆண்டுதோறும் திருமலை-திருப்பதி தேவஸ்தானத்தால் நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.