ஸ்ரீகாளஹஸ்தி:
திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் வருடாந்திர மகாசிவராத்திரி பிரம்மோற்சவ விழா நேற்று முன்தினம் பக்த கண்ணப்பர் கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கி நடந்து வருகிறது. விழாவின் 2-வது நாளான நேற்று ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர் கொடியேற்றம் நடந்தது.
முன்னதாக நேற்று காலை 10 மணியளவில் வெள்ளி அம்பாரிகளில் உற்சவர்களான ஞானப்பிரசுனாம்பிகை சமேத ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரரும், தனித்தனி சப்பரங்களில் விநாயகர், சண்டிகேஸ்வரர், வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியசாமி ஆகியோர் கோவிலின் நான்கு மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
பின்னர் உற்சவர்களான ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர்-ஞானப்பிரசுனாம்பிகை தாயார், விநாயகர், வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியசாமி, சண்டிகேஸ்வரர் கோவில் தங்கக் கொடிமரம் எதிரில் எழுந்தருளினர்.
உற்சவர்களான சந்திரசேகரர்-உமாதேவி (சிவன்-அம்பாள்) திரிசூலத்தில் இருந்து கொடியேற்ற விழா பூஜைகளை அர்ச்சகர்கள் தொடங்கினர். அதன்பிறகு சிறப்பு கலசம் நிறுவப்பட்டு சங்கல்ப பூஜைகள் தொடங்கி கலச பூஜைகள் செய்யப்பட்டன.
அஷ்டதிக் பாலகர்கள், ரிஷிகள், முப்பத்து முக்கோடி தேவர்களுக்கு பிரம்மோற்சவ விழாவில் பங்கேற்க அழைப்பு விடுக்கும் வகையில் வேதப் பண்டிதர்கள் வேத மந்திரங்களை முழங்க நாணல் கயிற்றில் சிவலிங்கம் உருவம் அச்சிடப்பட்ட கொடியானது, பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய வஸ்திரங்களை இணைத்து பக்தி கோஷம் முழங்க தங்கக் கொடிமரத்தில் ஏற்றப்பட்டது. பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய 3 ஆயிரத்துக்கு மேற்பட்ட வஸ்திரங்கள் அனைத்தும் கொடிமரத்தில் ஏற்றப்பட்டன.
கொடியேற்றும் நிகழ்ச்சியில் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவில் செயல் அலுவலர் டி.பாபிரெட்டி, எம்.எல்.ஏ.வின் தாயார், மனைவி, கோவில் அறங்காவலர் குழு தலைவர் கொட்டே சாய் பிரசாத் தம்பதியர், அறங்காவலர் குழு உறுப்பினர்கள், அலுவலர்கள், ஊழியர்கள் மற்றும் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.