ஸ்ரீரங்கம்,
ஸ்ரீரங்கத்தில் நடைபெற்று வரும் ஆடிப்பூர உற்சவத்தில் இன்று ஆண்டாள் நாச்சியார், கோதண்டராமர் திருக்கோலத்தில் அருள்பாலித்தார்.
ஆடி மாதம் பூரம் நட்சத்திரத்தில் ஆண்டாள் அவதரித்ததை கொண்டாடும் வகையில் வைணவ ஆலயங்களில் ஆடிப்பூர திருவிழா விமரிசையாக நடத்தப்படுகிறது. அவ்வகையில் இந்த ஆண்டின் ஆடிப்பூர திருவிழா விமரிசையாக நடைபெற்று வருகிறது.
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் திரு ஆடிப்பூர உற்சவம் நேற்று தொடங்கியது. ஸ்ரீரங்கம் மேல அடையவளஞ்சான் வீதியில் அமைந்துள்ள, ஸ்ரீ வெளி ஆண்டாள் சன்னதியில் நடைபெற்று வரும் விழாவில், முதல் நாளில் ஆண்டாள் நாச்சியார், வெண்ணைத்தாழி கண்ணன் திருக்கோலத்தில் அருள்பாலித்தார். இதனை முன்னிட்டு ஆண்டாள் நாச்சியாருக்கு சிறப்பு ஆரத்தி நடந்தது.
இரண்டாம் நாளான இன்று கோதண்டராமர் திருக்கோலத்தில் அருள்பாலித்தார். வலது கையில் அம்பு, இடது கையில் வில்லுடன் காட்சியளித்த ஆண்டாள் நாச்சியாருக்கு சிறப்பு ஆரத்தி நடந்தது. இந்நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.
இதேபோல் ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயிலில் உள்ள பரமபத நாதர் சன்னதியில் நடைபெற்று வரும் ஆடிப்பூரம் உற்சவத்தில், 2ம் நாளான இன்று ஆண்டாள் நாச்சியார், மூலவர் கேசி வதம், உற்சவர் கண்ணன் கவர்ந்த கூறைகளை ஆண்டாள் இரத்தல் திருக்கோலத்தில் எழுந்தருளி அருள்பாலித்தார்.