திருச்செந்தூர்,
விடுமுறை தினத்தை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இன்று பக்தர்கள் சுமார் 3 மணி நேரம் வரிசையில் காத்து நின்று சாமி தரிசனம் செய்தனர்.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தினசரி ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்கின்றனர். அதேபோல் திருவிழா மற்றும் விடுமுறை நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்கிகின்றனர்.
அவ்வகையில் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினமான இன்று பக்தர்களின் வருகை அதிகமாக இருந்தது. பக்தர்கள் அதிகாலை முதலே கடல் மற்றும் நாழிக்கிணறு தீர்த்தத்தில் புனித நீராடி, அதன்பின் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். பொதுதரிசன வழியில் சென்ற பக்தர்கள் சுமார் 3 மணி நேரம் காத்து நின்று சாமி தரிசனம் செய்தனர். இதனால் பொது தரிசன வரிசை மட்டுமின்றி, 100 ரூபாய் கட்டண தரிசன வரிசையிலும் பக்தர்களின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
விடுமுறை தினமான இன்று அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, 4.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 6 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும், தீபாராதனையும் நடந்தது. தொடர்ந்து மற்ற கால பூஜைகள் வழக்கம் போல் நடந்தன.