ஆன்மிகம்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தை உத்திர வருஷாபிஷேக விழா

விமான கலசங்களுக்கு அபிஷேகம் செய்யப்பட்டபின், மூலவருக்கு உச்சிகால அபிஷேகமும், தீபாராதனையும் நடந்தது.

திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆண்டு தோறும் இரு தினங்களில் வருஷாபிஷேகம் நடக்கும். மூலவர் பிரதிஷ்டை தினமான, தை மாத உத்திர நட்சத்திர தினத்திலும், கோவில் கும்பாபிஷேகம் நடந்த ஆனி மாதத்திலும் வருஷாபிஷேகம் நடக்கும். அவ்வகையில் தை உத்திர வருஷாபிஷேக விழா இன்று நடைபெற்றது.

வருஷாபிஷேகத்தை முன்னிட்டு இன்று அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டது. 4.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 5 உதயமார்த்தாண்ட அபிஷேகமும் நடந்தது. தொடர்ந்து கோவில் மகா மண்டபத்தில் மூலவர், வள்ளி, தெய்வானை கும்பங்களுக்கும், குமரவிடங்கப்பெருமான் சன்னதியில் சண்முகர் கும்பத்திற்கும், பெருமாள் சன்னதியில் பெருமாள் கும்பத்திற்கும் பூஜைகள் நடந்தது.

பின்னர் பூஜை செய்யப்பட்ட கும்ப கலசங்கள் காலை 9 மணிக்கு விமானதளத்திற்கு கொண்டுவரப்பட்டது. 9.25 மணிக்கு மூலவர், சண்முகர், பெருமாள் ஆகிய விமான கலசங்களுக்கு புனித நீரால் அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. தொடர்ந்து வள்ளி, தெய்வானை விமான கலசங்களுக்கு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது.

பின்னர் காலை 10 மணிக்கு மூலவருக்கு உச்சிகால அபிஷேகமும், தீபாராதனையும் நடந்தது. வருஷாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

SCROLL FOR NEXT