ஆன்மிகம்

தூத்துக்குடி பனிமய மாதா பேராலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

பனிமய மாதா உருவம் பொறித்த கொடி ஊர்வலமாகக் கொண்டுவரப்பட்டு கொடிமரத்தில் ஏற்றப்பட்டது.

தூத்துக்குடி,

தூத்துக்குடி தூய பனிமய மாதா ஆலயத்தில் 444-வது ஆண்டு பெருவிழா இன்று (ஞாயிற்றுக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கியது. காலை 7 மணியளவில் கூட்டுத் திருப்பலி நடந்தது. இந்த திருப்பலி முடிந்ததும் கொடியேற்ற விழா கோலாகலமாக நடைபெற்றது. பனிமய மாதா உருவம் பொறித்த கொடி ஊர்வலமாகக் கொண்டுவரப்பட்டு பேராலயம் எதிரே உள்ள கொடிமரத்தில் ஏற்றப்பட்டது.

அப்போது அங்கு கூடியுருந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் 'மரியே வாழ்க' என விண்ணை பிளக்க முழக்கமிட்டனர். பின்னர் சமாதானச் சின்னமாக வெள்ளை புறாக்கள் பறக்க விடப்பட்டன. தொடர்ந்து, பனிமய மாதா சொரூபத்துக்கு பொன் மகுடம் மற்றும் ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டுள்ளன. இந்த திருவிழா 10 நாட்கள் நடைபெற உள்ளது. திருவிழா நாட்களில் தினமும் ஜெபமாலை, திருப்பலி, மறையுரை, நற்கருணை ஆசீர் ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கின்றன.

விழாவில் வருகிற 3-ந் தேதி நற்கருணை பவனியும், 4-ந் தேதி இரவு 9 மணிக்கு ஆலய வளாகத்தில் அன்னையின் திருவுருவ பவனியும், 5-ந் தேதி நகர வீதிகளில் அன்னையின் திருவுருவ பவனியும் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை பேராலய அதிபர், பங்கு பேரவையினர், பங்கு மக்கள் செய்து உள்ளனர்.