திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடக்கும் விழாக்களில் தீர்த்தவாரி நிகழ்ச்சிகளும் ஒன்றாகும். திருவண்ணாமலை ஈசான்ய குளம், அய்யங்குளம், தாமரைகுளம், கலசபாக்கத்தில் செய்யாறு, மணலூர்பேட்டையில் தென்பெண்ணை ஆற்றில் நடக்கும் தீர்த்தவாரி நிகழ்ச்சிகளில் அருணாசலேஸ்வரர் பங்கேற்பார்.
அதன்படி திருவண்ணாமலை ஈசான்ய குளத்தில் நேற்று தைப்பூசத்தை முன்னிட்டு தீர்த்தவாரி நிகழ்ச்சி நடந்தது. அதையொட்டி நேற்று காலை கோவிலில் அருணாசலேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. அதன்பிறகு சாமி-அம்பாளுடன் சிறப்பு அலங்காரத்தில் மங்கள வாத்தியங்கள் முழங்க கோவிலில் இருந்து புறப்பட்டு ஈசான்ய குளத்துக்கு வருகை தந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
தொடந்து ஈசான்ய குளத்தில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடந்தது. அப்போது அருணாசலேஸ்வரரின் சூலாயுதத்துக்கு சிவாச்சாரியார் வேத மந்திரங்களை ஓதி சிறப்பு பூஜைகள் செய்தனர்.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மாலை வரை அங்கு பக்தர்களுக்கு அருள்பாலித்த அருணாசலேஸ்வரர் பின்னர் கோவிலுக்கு திரும்பினார்.
அருணாசலேஸ்வரர் கோவில் வரலாற்று கதையின்படி, திருவண்ணாமலை பகுதியை ஆட்சி செய்து வந்த வல்லாள மகாராஜா என்பவர் அருணாசலேஸ்வரரின் தீவிர பக்தர் ஆவார். அவருக்கு குழந்தை பாக்கியம் இல்லை. அருணாசலேஸ்வரரிடம், வல்லாள மகாராஜா தனது மனைவியுடன் தினமும் மனமுருக குழந்தை வரம் கேட்டு வேண்டி வந்துள்ளார்.
ஒரு நாள் வல்லாள மகாராஜாவின் கனவில் தோன்றிய அருணாசலேஸ்வரர், உனக்கு இந்தப் பிறவியில் குழந்தை பாக்கியம் இல்லை. என்னையே மகனாகப் பாவித்து கொள். இந்தப் பிறவியில் நானே உனது மகன் என்று கூறியுள்ளார். அதன்படி ராஜாவும் அருணாசலேஸ்வரரை தனது மகனாகப் பாவித்து சிறந்த முறையில் ஆட்சி புரிந்து வந்துள்ளார்.
அந்தச் சமயத்தில் தைப்பூசத்தின்போது ஈசான்ய குளத்தில் நடக்கும் தீர்த்தவாரி நிகழ்ச்சியில் அருணாசலேஸ்வரர் கலந்து கொண்டு விட்டு மாலையில் கோவிலுக்கு திரும்பி செல்லும் போது போர்க்களத்தில் வல்லாள மகாராஜா எதிரிகளால் கொல்லப்பட்டார் என்ற தகவல் அருணாசலேஸ்வரருக்கு தெரிவிக்கப்படும்.
பின்னர் தன்னை மகனான பாவித்த வல்லாள மகாராஜா இறந்ததை கேட்டு மேளதாளங்கள் இல்லாமல் கோவிலுக்கு அருணாசலேஸ்வரர் திரும்புவார் என்று கூறப்படுகிறது.
இந்த வரலாற்றுச் சம்பவத்தை நினைவு கூறும் வகையில் நேற்று மாலை அறிவொளி பூங்கா அருகே தீர்த்தவாரி முடித்து விட்டு அருணாசலேஸ்வரர் சென்றபோது பணியாளர் ஒருவர் வல்லாள மகாராஜா இறந்த செய்தியை தெரிவித்தார். இதையடுத்து அருணாசலேஸ்வரர் மேளதாளங்கள் இன்றி கோவிலுக்கு சென்றார்.