கல்யாண கோணத்தில் அருள்பாலித்த முருகப்பெருமான் 
ஆன்மிகம்

வல்லக்கோட்டை முருகன் கோவிலில் கல்யாண உற்சவம்

ஏராளமான பக்தர்கள் காவடிகள் சுமந்து வந்தும் பால் குடங்கள் எடுத்து வந்தும் முருகப்பெருமானை வழிபட்டனர்.

காஞ்சிபுரம்:

காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் அடுத்த வல்லக்கோட்டையில் புகழ்பெற்ற முருகன் கோவில் உள்ளது. இந்த தலம் பிரார்த்தனை தலம் என்பதால் இங்கு அடிக்கடி கல்யாண உற்சவம் நடைபெறுவது வழக்கம். அவ்வகையில் இன்று காலை கல்யாண உற்சவம் விமரிசையாக நடைபெற்றது.

கல்யாண உற்சவத்தை முன்னிட்டு காலை 7.30 மணிக்கு ஶ்ரீ வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி உற்சவருக்குப் பால், தயிர், சந்தனம், விபூதி, பஞ்சாமிர்தம், பன்னீர் உட்பட பலவித பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து ரோஜா, சாமந்தி, கதிர்பச்சை, சம்பங்கி மலர் மாலைகளால் அலங்காரம் செய்யப்பட்டு மணமக்கள் திருக்கோலத்தில் மயில் மண்டபத்திற்கு முருகப்பெருமான் எழுந்தருளினார். கல்யாண வரம்வேண்டி திராளான பக்தர்கள் மாலைகளுடன் வந்திருந்தனர்.

காலை 9.30 மணிக்கு கல்யாண உற்சவம் தொடங்கி 11.30 மணி வரை நடைபெற்றது. கோவில் தலைமை அர்ச்சகர் தலைமையில் ஐந்து அர்ச்சகர்கள் யாகம் வளர்த்து மந்திரங்கள் ஓதினர். மங்கலவாத்தியங்கள் ஒலித்திட 11.30 மணிக்கு மாங்கல்யதாரணம் நடைபெற்றது.

வல்லக்கோட்டை முருகன் கோவில்

திருக்கல்யாண நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு மணக்கோலத்தில் காட்சியளித்த முருகப்பெருமானை வழிபட்டனர். ஏராளமான பக்தர்கள் காவடிகள் சுமந்து வந்தும் பால் குடங்கள் எடுத்து வந்தும் முருகப்பெருமானை வழிபட்டனர்.

அதன்பிறகு கல்யாண கோலத்தில் முருகப்பெருமான் மூன்று முறை கோவிலை வலம் வந்தார்.