தூத்துக்குடி மாவட்டம், ஏரல் தாலுகா, தாமிரபரணி ஆற்றங்கரையின் தென்புறம் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற குரங்கணி முத்துமாலை அம்மன் கோவிலில் தை மாதம் கடைசி செவ்வாய்க்கிழமையான நேற்று திருமால் பூஜை நடைபெற்றது.
திருமால் பூஜையை முன்னிட்டு நேற்று முன்தினம் திங்கள் கிழமை இரவு 10 மணிக்கு வில்லிசை நிகழ்ச்சி நடைபெற்றது. நேற்று செவ்வாய் கிழமை காலை முத்துமாலை அம்மனுக்கு அபிஷேகம், சிறப்பு புஷ்ப அலங்காரம், விஸ்வரூப தரிசனம் அதை தொடர்ந்து விநாயகர், நாராயணர், அம்மன்கள், பெரியசாமி மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. முத்துமாலை அம்மன் தங்க திருமேனி அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்து அருள் பாலித்தார்.
தூத்துக்குடி மட்டுமின்றி வெளியூர் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து வந்திருந்த ஏராளமான பக்தர்கள் திருமால் பூஜையில் பங்கேற்று வழிபட்டனர். பக்தர்கள் பொங்கல் வைத்தும், தேங்காய் பழம் படைத்தும், நேர்த்தி கடன் செலுத்தியும் நெய் விளக்கேற்றியும் நீண்ட வரிசையில் நின்று முத்துமாலை அம்மனை தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு மதியம் அன்னதானம் வழங்கப்பட்டது.
மேலும் இரவு 1 மணிக்கு சுவாமி நாராயணர், ஸ்ரீதேவி, பூதேவி ஆகியோருடன் சப்பரத்தில் குரங்கணி ஊரை சுற்றி வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இன்று புதன்கிழமை காலை 10 மணி அளவில் ஊர் பொதுமக்கள் பொங்கலிட்டு அம்மனை வழிபட்டனர்.