புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறில் உலகப் புகழ் பெற்ற ஸ்ரீதர்ப்பாரண்யேஸ்வரர் சுவாமி தேவஸ்தானத்தில் தனிசன்னதியில் ஸ்ரீசனீஸ்வர பகவான் அருள்பாலித்து வருகிறார். இங்கு இரண்டரை ஆண்டுகளுக்கு ஒருமுறை வாக்கிய பஞ்சாங்க முறைப்படி சனிப்பெயர்ச்சி விழா வெகுவிமரிசையாக நடைபெறும். இதில் பங்கேற்க நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் கோயிலுக்கு வருகை தருவார்கள்.
அவ்வகையில் அடுத்த மாதம் (மார்ச்) சனிப்பெயர்ச்சி விழா நடைபெறுகிறது. மார்ச் 6-ந்தேதி காலை 8.24 மணிக்கு கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு சனிப்பெயர்ச்சி ஆகிறார். இதற்கான பந்தல்கால் முகூர்த்தம் நடும் விழா நேற்று நடைபெற்றது.
முன்னதாக பந்தல்காலுக்கு பால், தயிர், மஞ்சள் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களைக் கொண்டு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. அதைத்தொடர்ந்து கோவிலுக்கு சொந்தமான 5 கிராம மக்கள் சார்பாக பந்தக்கால்களை எடுத்து கோவிலில் வலம் வந்து பந்தக்கால் நடும் விழா விமரிசையாக நடைபெற்றது.
இதில் தருமபுர ஆதீன கட்டளை விசாரணை ஸ்ரீமத் சட்டநாத தம்பிரான் சுவாமிகள், ராஜசேகர் எம்.எல்.ஏ., கோவில் நிர்வாக அதிகாரி சுப்பிரமணி உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.