ஆடிப்பூரத் திருக்கல்யாண திருவிழா கொடியேற்றம்  
ஆன்மிகம்

திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோவில் ஆடிப்பூரத் திருக்கல்யாண திருவிழா கொடியேற்றம்

15 நாட்கள் நடைபெறும் திருவிழாவில் தினமும் மாலையில் சுவாமி, அம்பாள் வீதி உலா நிகழ்ச்சி நடைபெறுகிறது.

ராமநாதபுரம்,

திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோவிலில் ஆடிப்பூர திருக்கல்யாண திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானையில் ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானத்திற்கு பாத்தியப்பட்ட சிநேகவல்லி சமேத ஆதிரெத்தினேஸ்வரர் கோவில் உள்ளது. தேவாரப் பாடல் பெற்ற பாண்டிய நாட்டு ஸ்தலங்களில் ஒன்றாக விளங்கும் இக்கோவிலில் 1436 -ம் பசலிக்கான ஆடிப்பூரத் திருக்கல்யாணத் திருவிழா இன்று தொடங்கியது.

இன்று காலையில் சினேகவல்லியம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் மற்றும் சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. சிறப்பு பூஜையைத் தொடர்ந்து அம்மன் சன்னதியில் உள்ள கொடிமரத்தில், ஆடிப்பூர திருக்கலயாண திருவிழாவிற்கான கொடி ஏற்றப்பட்டது. கொடி மரத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் தீபாராதனை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து ராஜ மரியாதை, நாட்டார் மரியாதை வழங்கும் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

ஆடிப்பூரத் திருக்கல்யாண திருவிழா கொடியேற்றம் மற்றும் சிறப்பு அலங்காரத்தில் சிநேகவல்லி அம்மன்

15 நாட்கள் நடைபெறும் திருவிழா

15 நாட்கள் நடைபெறும் இக்கோவில் திருவிழாவில் தினமும் மாலையில் சுவாமி, அம்பாள் மற்றும் பரிவார தெய்வங்கள் வீதி உலா நிகழ்ச்சி நடைபெறுகிறது. 13-ம் தேதி அன்று ஒன்பதாம் திருநாளையொட்டி சிநேகவல்லியம்மன் தேரோட்டம் நடைபெறுகிறது.14-ம் தேதி திக்கு விஜயம், சுவாமி அம்பாள் மாலை மாற்றுதல் உற்சவம், தீர்த்த உற்சவம் நடைபெறுகிறது.

15 ஆம் தேதி அம்பாள் தபசு சுவாமி ரிஷப வாகனத்தில் காட்சியளித்தல், அம்பாள் கதிர் குளிர்வித்தல், உல்லாச சயன அலங்காரத்துடன் புஷ்ப பல்லக்கில் திருவீதி உலா நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. 16-ம் தேதி அன்று சுவாமி- அம்பாள் திருக்கல்யாண உற்சவம் நடைபெறுகிறது.