தேரோட்டம் 
ஆன்மிகம்

பெண்கள் மட்டுமே வடம் பிடிக்க... ரத வீதிகளில் வலம் வந்த ஐயாரப்பர் கோவில் தேர்

தேரோட்டத்தை முன்னிட்டு அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடைபெற்றது.

திருவையாறு,

திருவையாறு அய்யாரப்பர் கோவில் திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று நடைபெற்றது. இதில் பெண்கள் மட்டுமே கலந்துகொண்டு தேர் இழுத்தனர்.

தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு அறம் வளர்த்த நாயகி உடனுறை ஐயாறப்பர் கோவிலில் ஆடிப்பூர மஹோற்சவ விழா கடந்த 5-ம் தேதி தொடங்கி விமரிசையாக நடைபெற்று வருகிறது. விழா நாட்களில் தினமும் காலை மற்றும் இரவில் அம்பாள் வாகனத்தில் எழுந்தருளி, பக்தர்களக்கு அருள்பாலித்தார்.

ஆடி அமாவாசையன்று (ஆகஸ்ட் 12) இரவு ஐயாறப்பர் கோவிலில் தென்கயிலாயம் எனப்படும் அப்பர் சன்னிதியில் அப்பருக்கு சிவபெருமான் காட்சி கொடுக்கும் ஆடி அப்பர் கயிலைகாட்சி நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.

விழாவின் முக்கிய விழாவான தேரோட்டம் இன்று நடைபெற்றது. தேரோட்டத்தை முன்னிட்டு, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடைபெற்றது. அதன்பின் மேள வாத்தியங்கள் முழங்க தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் அம்மாள் திருத்தேரில் எழுந்தருளியதும், தேர் வடம் பிடிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் ஏராளமான பெண்கள் கலந்துகொண்டு “ஓம் சக்தி” என முழக்கம் எழுப்பியபடி தேர் இழுத்து வழிபட்டனர். தேரோடும் வீதியின் இருபுறமும் பக்தர்கள் திரண்டு நின்று, தரிசனம் செய்தனர். பெண்கள் மட்டுமே தேர் இழுப்பது இந்த ஆடிப்பூர திருவிழாவின் தனிச்சிறப்பாகும்.