திருவையாறு,
திருவையாறு அருகே மேலபுனவாசல் கிராமத்தில் விநாயகர், சீனிவாச பெருமாள் கோவில்களில் அஷ்டபந்தன மஹா கும்பாஷேகம் விமரிசையாக நடைபெற்றது.
தஞ்சை மாவட்டம், திருவையாறு அருகே மேலப்புனவாசல் கிராமத்தில் உள்ள விநாயகர், காசிவிஸ்வநாதர் மற்றும் சீனிவாசப்பெருமாள் கோவில்களில் கும்பாபிஷேகம் நடத்த தீர்மானிக்கப்பட்டு அதற்கான திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இப்பணிகள் நிறைவு பெற்றதையடுத்து, கடந்த 28ம் தேதி காப்பு கட்டுதலுடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது.
அன்றைய தினம் மாலையில் கொள்ளிடம் ஆற்றிலிருந்து யாகசாலை பூஜைக்கான புனித நீர் எடுத்து வரப்பட்டு பூஜை தொடங்கியது. 29ம் தேதி (நேற்று) மாலை 5.30 க்கு முதல் கால யாகசாலை பூஜைகள் மற்றும் தீபாராதனை நடந்தது.
இன்று காலை யாக சாலை பூஜைகள் நிறைவு பெற்று கடம் புறப்பாடு நடைபெற்றது. யாகசாலையில் பூஜிக்கப்பட்ட புனித நீர் கலசங்கள் கோவிலை வலம் வந்து காலை 9.30 மணிக்கு காசிவிஸ்வநாதர் மற்றும் சீனிவாசப்பெருமாள் கோயில் உள்ளிட்ட அனைத்து விமான கலசங்களுக்கும் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.