திருவிழா முடிந்து மலைக்கு திரும்பிய அர்த்தநாரீஸ்வரர் 
ஆன்மிகம்

திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவில் தேர்த் திருவிழா நிறைவு

திருவிழாவின் நிறைவு நாளான நேற்று அதிகாலை கைலாசநாதர் ஆலயத்தில் பரிவார மூர்த்திகளுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன.

திருச்செங்கோடு,

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் அர்த்தநாரீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி மாத விசாக திருவிழா 14 நாட்கள் நடைபெறும். அவ்வகையில், இந்த ஆண்டு வைகாசி மாத விசாக திருவிழா கடந்த மாதம் 22-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இதனை தொடர்ந்து பத்ரகாளியம்மன், விநாயகர், செங்கோட்டு வேலவர், ஆதிகேசவப் பெருமாள், 3 நாட்கள் அர்த்தநாரீஸ்வரர் தேரோட்டங்கள் நடைபெற்றன. நான்கு ரத வீதிகளில் நடைபெற்ற தேர்த்திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு வடம் பிடித்து தேர் இழுத்தனர்.

அர்த்தநாரீஸ்வரர்

கடந்த செவ்வாய்க்கிழமை பெரிய தேர் நிலை சேர்ந்ததும் கொடி இறக்கப்பட்டு இறுதி நாள் மண்டப கட்டளைகளில் உற்சவர்களுக்கு அபிஷேக ஆராதனைகள், பூஜைகள் நடந்தன. திருவிழாவின் நிறைவு நாளான நேற்று அதிகாலை கைலாசநாதர் ஆலயத்தில் அர்த்தநாரீஸ்வரர், ஆதிகேசவப் பெருமாள், செங்கோட்டு வேலவர் உள்ளிட்ட பரிவார மூர்த்திகளுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன.

பின்னர் நான்கு கால் மண்டபத்தில் ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது. தென்னிந்திய சிவாச்சார ஜங்கம் மண்டபத்தில் சாமிகள் மாலை மாற்றி படிக்கட்டுகள் வழியாக மலைக்கு திரும்பினர். மலையில் சாமிகள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்து எழுந்தருள, தேர்த்திருவிழா நிறைவு பெற்றது.