திருமலை,
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடந்து வரும் பிரம்மோற்சவ விழாவின் 6-வது நாளான இன்று காலையில் அனுமந்த வாகனத்தில் மலையப்ப சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா விமரிசையாக நடந்து வருகிறது. விழாவின் 5-வது நாளான நேற்று முக்கிய நிகழ்வான கருட சேவை நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட தங்க கருட வாகனத்தில் மலையப்ப சுவாமி எழுந்தருளி, மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களக்கு அருள்பாலித்தார். லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
விழாவின் 6-ம் நாளான இன்று காலை அனுமந்த வாகன சேவை நடைபெற்றது. உற்சவர் மலையப்ப சுவாமி, அனுமந்த வாகனத்தில் எழுந்தருளி மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பகவான் மீதான பக்தி, வலிமை மற்றும் தளராத சேவை ஆகியவற்றின் அடையாளமாகத் திகழும் கம்பீரமான அனுமந்த வாகனத்தில் பவனி வந்த பகவானை, ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.