திருப்பதி,
திருப்பதி கோவிந்தராஜ சுவாமி கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடியேற்ற நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.
கொடியேற்ற நிகழ்வைத் தொடர்ந்து பிற்பகல் உற்சவ மூர்த்திகளுக்குப் பால், தயிர், தேன், இளநீர், மஞ்சள் மற்றும் சந்தனக் கலவை ஆகியவற்றைக் கொண்டு ‘ஸ்நாபன திருமஞ்சனம்’ நடைபெற்றது. மாலையில் ‘ஊஞ்சல் சேவை’ நடைபெற்றது. அப்போது உற்சவ மூர்த்திகள் ஊஞ்சலில் எழுந்தருளச் செய்யப்பட்டு, ஊஞ்சலை மென்மையாக முன்னும் பின்னும் அசைத்து ஆட்டிவிட்டனர்.
இரவில் பெரிய சேஷ வாகன சேவை நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட பெரிய சேஷ வாகனத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமாதே கோவிந்தராஜ சுவாமி எழுந்தருளி, மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். வாகன சேவைக்கு முன்னால் மங்கள வாத்தியங்கள் முழங்க, கோலாட்டங்கள், பஜனைகள் மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. சில கலைஞர்கள் கடவுள்களைப்போன்று வேடமணிந்து ஊர்வலமாக வந்தனர்.
இன்று காலையில் சிறிய சேஷ வாகனத்தில் கோவிந்தராஜ சுவாமி எழுந்தருளி, மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
பக்தர்கள் 'கோவிந்த' நாம கோஷங்கள் எழுப்பியபடி, மாட வீதிகளில் வலம் வந்த பகவானை வழிபட்டனர். தேங்காய் உடைத்தும், ஆரத்தி காட்டியும் சிலர் வழிபட்டனர்.