பவித்ர மாலைகள் சமர்ப்பணம் 
ஆன்மிகம்

திருப்பதி கோதண்டராமர் கோவிலில் மூலவர், உற்சவர்களுக்கு பவித்ர மாலைகள் சமர்ப்பணம்

பவித்ரோற்சவத்தின் இரண்டாம் நாள் மாலையில் உற்சவ மூர்த்திகள் தங்கத் திருச்சி வாகனத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாட வீதிகளில் உலா வந்து அருள்பாலித்தனர்.

திருப்பதி,

திருப்பதி கோதண்டராமர் கோவிலில் நடந்து வரும் பவித்ரோற்சவத்தின் 2-வது நாளான நேற்று மூலவர், உற்சவர்களுக்கு பவித்ர மாலைகள் சமர்ப்பிக்கப்பட்டன.

பவித்ரோற்சவம்

திருப்பதி கோதண்டராமர் கோவிலில் வருடாந்திர பவித்ரோற்சவம் நடந்து வருகிறது. உற்சவத்தின் 2-வது நாளான நேற்று அதிகாலை சுப்ரபாதத்தில் வேத சடங்குகள் தொடங்கின. தொடர்ந்து தோமாலை சேவை, சகஸ்ர நாமார்ச்சனை நடந்தது. அதன்பிறகு உற்சவர்களான சீதா, லட்சுமண சமேத ராமர் யாகசாலைக்கு கொண்டு வரப்பட்டனர். அங்கு விஷ்வக்சேன ஆராதனை, புண்யாஹவாசனம், கும்ப ஆராதனை, ஹோம சடங்குகள் நடந்தன.

தொடர்ந்து உற்சவர்களான சீதா, லட்சுமணர் சமேத ராமருக்கு பால், தயிர், தேன், சந்தனம் மற்றும் இளநீர் ஆகியவற்றால் ஸ்நாபன திருமஞ்சனம் செய்யப்பட்டது.

தொடர்ந்து யாக சாலையில் உரிய பூஜை முறைகள் நிறைவடைந்ததும் புனித பவித்ர மாலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு விஷ்வக்சேனர், துவார பாலகர்கள், பாஷ்யகாரர், கருடாழ்வார், ஹோம குண்டங்கள். பலி பீடம், கொடிமரம் மற்றும் ஆஞ்சநேயருக்கு சமர்ப்பிக்கப்பட்டன.

ஸ்நாபன திருமஞ்சனம்

உற்சவர்கள் வீதிஉலா

மாலையில் சீதா, ராமர், லட்சுமணர் உற்சவ மூர்த்திகள் தங்கத் திருச்சி வாகனத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாட வீதிகளில் உலா வந்து அருள்பாலித்தனர். தொடர்ந்து யாகசாலையில் வேத சடங்குகள் நடந்தன.

மேற்கண்ட நிகழ்ச்சிகளில் கோவில் துணை அலுவலர் பி.நாகரத்னா, தலைமை அர்ச்சகர் ஆனந்தகுமார் தீட்சிதர். கண்காணிப்பாளர் சீனிவாசுலு ரெட்டி, கோவில் ஆய்வாளர்கள் சுரேஷ், ஹரிகிருஷ்ணா மற்றும் அர்ச்சகர்கள், ஸ்ரீவாரி சேவா சங்க தொண்டர்கள், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

விழாவின் 3-வது நாளான இன்று (திங்கட்கிழமை) பவித்ரோற்சவத்தின் நிறைவு நிகழ்ச்சிகள் நடக்கின்றன. அத்துடன் யாகசாலையில் வேத சடங்குகளுடன் பூர்ணாஹுதி நடக்கிறது.