திருப்பதி கோவிந்தராஜ சுவாமி கோவிலில் தெப்போற்சவம் கடந்த 26-ம் தேதி தொடங்கி விமரிசையாக நடைபெற்று வருகிறது. அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் உற்சவ மூர்த்திகள் எழுந்தருளி திருக்குளத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்கள். அதன்பின்னர் மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்கள்.
தெப்ப உற்சவத்தின் முதல் நாளில் கோதண்டராம சுவாமியும், இரண்டாம் நாளில் ருக்மணி சத்யபாமா சமேத பார்த்தசாரதியும், மூன்றாம் நாளில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் கல்யாண வெங்கடேஸ்வர சுவாமியும், நான்காம் நாளில் ஆண்டாளுடன் கிருண்ணரும், ஐந்தாம் நாளில் கோவிந்தராஜ சுவாமியும் தெப்பத்தில் வலம் வந்து அருள்பாலித்தனர். அதன்பின்னர் மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
ஆறாம் நாளான நேற்றும் கோவிந்தராஜ சுவாமி, ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களுடன் தெப்பத்தில் எழுந்தருளி திருக்குளத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு தெய்வீக தரிசனம் அளித்து அருள்பாலித்தார். பின்னர் மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
தெப்ப உற்சவ நிகழ்வில் பெரிய ஜீயர் மற்றும் சின்ன ஜீயர் சுவாமிகள், திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாக அதிகாரி அனில் குமார் சிங்கால் மற்றும் அதிகாரிகள், அர்ச்சகர்கள், கோவில் ஊழியர்கள், பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.