திருப்பதி திருக்குடை ஊர்வலம் 
ஆன்மிகம்

சென்னையில் திருப்பதி திருக்குடை ஊர்வலம்... ஏராளமான பக்தர்கள் தரிசனம்

ஊர்வலம் செல்லும் பகுதிகளில் ஏராளமான பக்தர்கள் திருக்குடைகளை தரிசனம் செய்து வழியனுப்பி வைக்கிறார்கள்.

சென்னை,

இந்து தர்மார்த்த சமிதி சார்பில் சென்னையில் சென்ன கேசவ பெருமாள் கோவிலில் இருந்து திருமலை திருப்பதி திருக்குடை ஊர்வலம் தொடங்கியது.

திருப்பதி பிரம்மோற்சவம்

ஆந்திர மாநிலம், திருப்பதி திருமலையில் உள்ள ஏழுமலையான் கோவிலில் புரட்டாசி மாத பிரம்மோற்சவத்தின்போது ஏழுமலையான் கருட சேவைக்கு, தமிழக பக்தர்கள் சார்பில், வெண்பட்டு திருக்குடைகள் காணிக்கையாக செலுத்தப்படுவது வழக்கம். இந்து தர்மார்த்த சமிதி டிரஸ்ட் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் சென்னையில் இருந்து வெண்பட்டு குடைகள் காணிக்கையாக செலுத்தப்படுகிறது.

அவ்வகையில் இந்த ஆண்டின் திருப்பதி திருக்குடை ஊர்வலம் இந்து தர்மார்த்த சமிதி டிரஸ்ட் சார்பில் சென்னை பூக்கடையில் உள்ள சென்ன கேசவ பெருமாள் கோவிலில் இருந்து சிறப்பு பூஜைகளுடன் இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. இந்த ஊர்வலம் மதியம் பைராகி மடத்தை அடைந்தது.

கவுனி தாண்டும் முக்கிய நிகழ்வு

பக்தர்கள் புடைசூழ மிகுந்த உற்சாகத்துடன் எடுத்துச் செல்லப்படும் 11 திருக்குடைகள், மாலை 4 மணியளவில் வால்டாக்ஸ் சாலை வழியாக கவுனி தாண்டுகின்றன. பின் இந்த ஊர்வலம் சூளை நெடுஞ்சாலை, ஓட்டேரி மேம்பாலம் வழியாக அயனாவரம் காசி விசுவநாதர் கோவிலுக்கு செல்கிறது.

அங்கிருந்து நாளை காலை 6 மணிக்கு திருக்குடை ஊர்வலம் தொடங்கி, பெரம்பூர், திரு.வி.க.நகர் வழியாக வில்லிவாக்கம் சென்று, சவுமிய தாமோதர பெருமாள் கோவிலை அடைகிறது. செப்டம்பர் 15-ம் தேதி பாடி, முகப்பேர், அம்பத்துார் வழியாக இரவு திருமுல்லைவாயல் செல்கிறது. செப்டம்பர் 16-ம் தேதி ஆவடி இந்து கல்லுாரி, பட்டாபிராம், திருநின்றவூர் வழியாக வெங்கடேஸ்வரா திருமண மண்டபம் செல்கிறது.

பெருமாளுக்கு சமர்ப்பணம்

செப்டம்பர் 17-ம் தேதி திருப்பாச்சூர், கனகம்மாள்சத்திரம் வழியாக, கீழ்த்திருப்பதி எஸ்.எம்.எஸ்.ஓ., சபா கல்யாண மண்டபம் செல்கிறது. செப்டம்பர் 18-ம் தேதி காலை 6 மணிக்கு திருப்பதியை அடைகிறது. பின்னர் திருமலைக்கு சென்று, மாலை 3 மணிக்கு பெருமாளுக்கு திருக்குடைகள் சமர்ப்பிக்கப்பட உள்ளன. மாட வீதிகளில் வலம் வந்து பட்டு வஸ்திரம் மற்றும் மங்கல பொருட்களுடன் இந்த திருக்குடைகள் சமர்ப்பிக்கப்படுகின்றன.

திருப்பதி திருக்குடை ஊர்வலம்

சென்னையின் பிரம்மாண்ட ஆன்மீக நிகழ்வு

இந்த பிரமாண்டமான திருக்குடை ஊர்வலம் சென்னையின் பிரசித்தி பெற்ற நிகழ்வாக பார்க்கப்படுகிறது. ஊர்வலம் செல்லும் பகுதிகளில் ஆங்காங்கே பக்தர்கள் மற்றும் ஆன்மிக அமைப்புகள் சார்பில் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு, சிறப்பு பூஜைகள் செய்து திருக்குடைகளை வரவேற்று வழியனுப்பி வைக்கிறார்கள். அனைத்து பகுதிகளிலும் பக்தர்களுக்கு அன்னதானம், பிரசாத விநியோகம் தொடர்ந்து நடைபெறுகிறது. திருக்குடைகளை தரிசனம் செய்வதற்காக ஊர்வல பாதைகளில் ஏராளமான பக்தர்கள் திரண்டுள்ளனர்.

இதனால் திருக்குடைகள் ஊர்வலம் செல்லும் பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பக்தர்களின் பாதுகாப்பிற்காகவும், ஊர்வலம் தடையின்றி நடைபெறவும் அந்தந்த பகுதி காவல்நிலைய அதிகாரிகள் தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

SCROLL FOR NEXT