திருமலை,
பிரம்மோற்சவ விழாவிற்காக திருப்பதி ஏழுமலையான் கோவில் புஷ்கரணியில் நடைபெறும் சீரமைப்பு பணியை தேவஸ்தான கூடுதல் அதிகாரி ஆய்வு செய்தார்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அடுத்த மாதம் (செப்டம்பர்) 15 முதல் 23-ந்தேதி வரை 9 நாட்கள் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடக்கிறது. அதை முன்னிட்டு திருமலையில் உள்ள ஸ்ரீவாரி புஷ்கரணியில் (திருக்குளம்) சீரமைப்பு பணிகள் முழுவீச்சில் நடைபெறுகின்றன.
இந்த பணிகளை திருமலை திருப்பதி தேவஸ்தான கூடுதல் அதிகாரி வெங்கய்யா சவுத்ரி பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர், புஷ்கரணியில் பக்தர்களுக்கு எந்தவித இடையூறும் ஏற்படாத வகையில் கிரில்கள் அமைக்க வேண்டும், புஷ்கரணியின் ஆழம் குறித்து பக்தர்கள் அறிந்து கொள்ளும் வகையில் எச்சரிக்கை மற்றும் அறிவிப்பு பலகைகளை அமைக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
ஆய்வின்போது தேவஸ்தான என்ஜினீயர்கள் வேணுகோபால், பாஸ்கர், சுதாகர், சீனிவாசராவ், சந்திரசேகர், பறக்கும் படை அலுவலர் சுரேந்திரா மற்றும் பலர் உடனிருந்தனர்.