மகா பிரத்யங்கிரா தேவி யாகம் 
ஆன்மிகம்

வைகாசி அமாவாசை.. சாணார்பட்டி அருகே மகா பிரத்யங்கிரா தேவி யாகம்

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் யாகத்தில் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

திண்டுக்கல்,

திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகே மேட்டுக்கடை மல்லத்தான் பாறையில் ஆதி பரஞ்சோதி சகலோக சபை மடம் உள்ளது. இங்கு உலக மக்களின் நலன் வேண்டி வைகாசி மாத அமாவாசையை முன்னிட்டு மகா பிரத்யங்கிரா தேவி யாகபூஜை நடைபெற்றது. இந்த யாக பூஜையை ஆதி பரஞ்சோதி சகலோக சபை நிர்வாகி திருவேங்கட ஜோதி பட்டாச்சாரியார் தலைமை தாங்கி நடத்தி வைத்தார்.

இதையொட்டி பிரத்யங்கிரா தேவி அம்மன், நரசிங்க பெருமாளுக்கு பூக்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் யாககுண்டத்தில் மிளகாய் வற்றல் ஏராளமாக கொட்டப்பட்டு வேத மந்திரங்கள் முழங்க யாக வேள்வி பூஜை நடத்தப்பட்டது

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த ஏராளமான பக்தர்கள் யாகத்தில் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். வெளிநாட்டு பக்தர்கள் இணையதளம் வழியாக பூஜையில் பங்கேற்றனர். பூஜையில் கலந்து கொண்ட பக்தர்கள் தங்களது வேண்டுதல்களை காகிதத்தில் எழுதி அதனை அக்னி குண்டத்தில் போட்டு வேண்டிக்கொண்டனர்.

இந்த பூஜையினால் வியாபாரம் வளர்ச்சி அடையும், செல்வம் சேரும், குடும்பத்தில் அமைதி ஏற்படும், திருமணம் கைகூடும், குழந்தை பாக்கியம் கிடைக்கும், முன்னோர்கள் வழி பாவம் தீரும் என தெரிவிக்கப்பட்டது.

யாக பூஜைக்கு முன்னதாக, கோவிலில் உள்ள கோசாலையில் வளர்க்கப்பட்டு வரும் சுமார் 100க்கும் மேற்பட்ட நாட்டு மாடுகளுக்கு அகத்திக்கீரை வழங்கப்பட்டு அமாவாசை கோபூஜை நடந்தது.