வடபழனி தேரோட்டம் 
ஆன்மிகம்

வடபழனி முருகன் கோவிலில் வைகாசி விசாக திருவிழா.. விமரிசையாக நடைபெற்ற தேரோட்டம்

பக்தர்கள் அரோகரா முழக்கத்துடன் தேர் இழுத்து முருகப்பெருமானை வழிபட்டனர்.

சென்னை,

சென்னை வடபழனி முருகன் கோவிலில் வைகாசி விசாக பிரம்மோற்சவ திருவிழா கடந்த 21-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. தினசரி காலை மற்றும் மாலையில் சுவாமி, வாகனங்களில் எழுந்தருளி வீதிவலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியருக்கு சிறப்பு அபிஷேகமும் நடைபெற்றது.

தேரோட்டம்

விழாவின் முக்கிய நிகழ்வாக, இன்று காலை தேரோட்டம் விமரிசையாக நடைபெற்றது. சிறப்பு பூஜைக்கு பிறகு உற்சவர் வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி திருத்தேரில் எழுந்தருளியதும் தேர் வடம் பிடிக்கப்பட்டது. ‘கந்தனுக்கு அரோகரா’ என்ற முழக்கத்துடன் திரளான பக்தர்கள் தேர் இழுத்து வழிபட்டனர்.

30-ந் தேதி காலையில் தீர்த்தவாரி கலசாபிஷேகமும் மாலையில் திருக்கல்யாண உற்சவமும் நடக்கிறது. அன்று இரவு மயில் வாகனத்தில் சுவாமி வீதி உலா நிகழ்ச்சியும் அதைத்தொடர்ந்து கொடியிறக்கமும் நடக்கிறது. 31-ந் தேதி இரவு 7 மணிக்கு விசேஷ புஷ்ப பல்லக்கில் சுவாமி புறப்பாடு நடைபெறுகிறது.