சப்த மாதாக்களில் முக்கியமானவளான வாராகியை, பஞ்சமி திதியில் வழிபாடு செய்வது, சிறப்பான பலன்களைப் பெற்றுத் தரும். வீட்டில் வாராகி யந்திரம் வைத்திருப்பவர்கள், விக்கிரகம் வைத்திருப்பவர்கள், பால், தேன், இளநீர், பஞ்சாமிர்தங்களால் தேவிக்கு அபிஷேகம் செய்து, அர்ச்சிப்பது நன்மையளிக்கும். வாராகியை வழிபடுபவர்களுக்கு, மந்திர சித்தி, வாக்கு சித்தி கிடைக்கும். இந்த தேவியை பூஜிப்பவர்களுக்கு, செய்வினை அண்டாது என்பது நம்பிக்கை.
வாராகியை வாசனைப் பூக்களால், குறிப்பாக சிவப்பு நிற பூக்களைக் கொண்டு பூஜிப்பது விசேஷம். கருப்பு உளுந்தில் செய்த வடையும், மிளகு சேர்த்த தயிர் சாதமும். சர்க்கரை வள்ளி கிழங்கும், சுக்கு சேர்த்த பானகமும், இந்த தேவிக்கு சிறப்புக் குரிய நைவேத்தியங்கள். பூமி கீழ் விளையும் பனங்கிழங்கு, கருணைக்கிழகு போன்ற பலவகைக் கிழங்கு வகைகளை அன்னைக்குப் படைத்து, பின்னர் பிரசாதமாக உண்பது விசேஷம்.
நாளை (வெள்ளிக்கிழமை) தை மாத தேய்பிறை பஞ்சமி தினம் ஆகும். இன்று நள்ளிரவு கடந்து 3.11 மணிக்கு பஞ்சமி திதி நேரம் தொடங்குகிறது. நாளை நள்ளிரவு கடந்து மறுநாள் 4.03 மணி வரை பஞ்சமி திதி உள்ளது. இந்த நேரத்தில் வாராகி வழிபாட்டை மேற்கொள்ளலாம்.
திருமணத்தடை உள்ளவர்கள், குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள், எதிரிகளால் பாதிப்படைந்தவர்கள், வழக்குகளில் சிக்கியவர்கள் வாராகி அம்மனை வழிபடுவதால் பலன் கிடைக்கும்.
இந்த பஞ்சமி தினம் வெள்ளிக்கிழமையில் வருவது மிகவும் சிறப்பு வாய்ந்தது. வெள்ளிக்கிழமையுடன் கூடிய பஞ்சமி நாளில் வாராகியை வழிபடும் பெண்களுக்கு மாங்கல்ய பலம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
வாராகியின் திருநாமத்தை உச்சரித்து வழிபட்டால் எந்தக் காரியத்திலும் வெற்றி கிட்டும் என்று ஞான நூல்கள் போதிக்கின்றன. நம் உடலில் இருக்கும் ஆறு ஆதார சக்கரத்தில் நெற்றியில் விளங்கும் ஆக்ஞா சக்கரத்திற்கு உரிய தேவி ஸ்ரீ வாராகி தேவி.
மிக எளிய முறையில் வழிபாடு செய்தாலே மனமிரங்கி வரங்கள் அளித்திடும் தன்மை கொண்டவள் ஸ்ரீ வாராகி தேவி. பில்லி, சூனியம், கண் திருஷ்டி போன்ற தீவினைகளை வேரோடு களைபவள் என்று ‘ஸ்ரீ வாராகி மாலை’ போற்றுகின்றது.