உற்சவர்களுக்கு சிறப்பு அபிஷேகம் 
ஆன்மிகம்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வசந்த உற்சவம் நிறைவு

வசந்த மண்டபத்தில் எழுந்தருளிய உற்சவர்களுக்கு பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.

திருப்பதி,

திருப்பதி ஏழுமலையான் கோவில் பின்பக்கம் அமைக்கப்பட்ட வசந்த மண்டபத்தில் வருடாந்திர வசந்த உற்சவம் மூன்று நாட்கள் விமரிசையக நடந்தது.

முதல் மற்றும் 2-வது நாளில் மலையப்ப சுவாமி தனது உபய நாச்சியார்களுடன் பங்கேற்ற நிலையில், இறுதி நாளான நேற்று உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமி மற்றும் சீதா, ராமர், லட்சுமணர், ஆஞ்சநேயர் மற்றும் ருக்மனி சமேத ஸ்ரீகிருஷ்ணர் ஏழுமலையான் கோவிலில் இருந்து தனித்தனி தங்கத்திருச்சி வாகனங்களில் எழுந்தருளி நான்கு மாடவீதிகளில் ஊர்வலமாக சென்று வசந்த மண்டபத்தை அடைந்தனர்.

வசந்த மண்டபத்தில் ஒரே இடத்தில் தனித்தனி மேடைகளில் உற்சவர்கள் எழுந்தருளினர். மதியம் 2 மணியில் இருந்து மாலை 4 மணி வரை உற்சவர்களுக்கு மஞ்சள், குங்குமம், சந்தனம், பால், தயிர், தேன், இளநீர், பஞ்சாமிர்தம் போன்ற சுகந்த திரவியங்களால் ஸ்நாபன திருமஞ்சனம் எனப்படும் அபிஷேகம் செய்யப்பட்டது.

அதன்பிறகு மாலை வசந்த மண்டபத்தில் இருந்து புறப்பட்டு கோவிலை அடைந்தனர். இதோடு வருடாந்திர வசந்தோற்சவம் நிறைவடைந்தது.

வசந்த உற்சவ ஊர்வலம்

வசந்த உற்சவத்தை முன்னிட்டு கோவிலில் கல்யாணோற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம், சகஸ்ர தீப அலங்கார சேவை ஆகியவை ரத்து செய்யப்பட்டன.

மேலும் கோவிலில் ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி அன்று இரவில் நடக்கும் கருட சேவை (கருடவாகன வீதிஉலா) ரத்து செய்யப்பட்டது.

மேற்கண்ட நிகழ்ச்சியில் திருமலை பெரிய ஜீயர் சுவாமி, சின்ன ஜீயர் சுவாமி, பேஷ்கார் ராமகிருஷ்ணா மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள், பக்தர்கள் கலந்து கொண்டனர்.