விநாயகர் ஊர்வலம் 
ஆன்மிகம்

வேலாயுதம்பாளையம் பகுதியில் விநாயகர் ஊர்வலம்.. தவுட்டுப்பாளையம் காவிரி ஆற்றில் சிலைகள் கரைப்பு

புகழிமலை அடிவாரத்தில் தொடங்கிய விநாயகர் ஊர்வலம், கரூர்- சேலம் தேசிய நெடுஞ்சாலை வழியாக சென்று காவிரி ஆற்றை அடைந்தது.

நொய்யல்,

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வேலாயுதம்பாளையம் பகுதியில் வைக்கப்பட்டு பூஜை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள், ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு தவுட்டுப்பாளையம் காவிரி ஆற்றில் கரைக்கப்பட்டன.

விநாயகர் ஊர்வலம்

கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் சுற்று வட்டார பகுதிகளில் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இந்து முன்னணி சார்பிலும், அந்தந்த பகுதி பொதுமக்கள் சார்பிலும் கடந்த திங்கட்கிழமை விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு பூஜை செய்யப்பட்டது. பின்னர் இந்த விநாயகர் சிலைகளை கரைப்பதற்கு ஆயத்தமானார்கள்.

இதற்காக சிலைகள் அனைத்தும் நேற்று தனித்தனி வாகனங்களில் வைக்கப்பட்டு அலங்காரம் செய்யப்பட்டு புகழிமலை பாலசுப்பிரமணியசாமி கோவில் அடிவாரத்தில் வரிசையாக நிறுத்தப்பட்டன. அதனைத் தொடர்ந்து இந்து முன்னணி சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டம் முடிந்தவுடன் விநாயகர் சிலை ஊர்வலம் தொடங்கியது. இந்து முன்னணி முக்கிய பொறுப்பாளர்கள் விநாயகர் சிலை வாகன ஊர்வலத்தை துவக்கி வைத்தனர்.

சிலைகள் கரைப்பு

மாலை 7 மணிக்கு மேல் புகழிமலை அடிவாரத்தில் துவங்கிய இந்த ஊர்வலம், தேசிய நெடுஞ்சாலை மற்றும் முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் புகழிமலை பாலசுப்பிரமணிய சுவாமி மலையை சுற்றி கடைவீதி வழியாக சென்று கரூர்- சேலம் தேசிய நெடுஞ்சாலை வழியாக சென்று இரவு சுமார் 9.30 மணிக்கு தவுட்டுப்பாளையம் இடது புறம் உள்ள காவிரி ஆற்றை அடைந்தது. பின்னர் அந்த சிலைகள் ஒவ்வொன்றாக ஆற்று தண்ணீரில் கரைக்கப்பட்டன. அதேபோல் நேற்று முன்தினம் இரவு பொதுமக்கள் வைத்திருந்த 15 விநாயகர் சிலைகளை கரைத்தனர்.

இரவில் விநாயகர் சிலைகளை கரைப்பதற்காக தேசிய நெடுஞ்சாலையிலிருந்து காவிரி ஆற்று தண்ணீர் வரை நெடுகிலும் மின்விளக்குகள் அமைக்கப்பட்டிருந்தன. விநாயகர் சிலைகளை தூக்கி தண்ணீரில் கரைப்பதற்கு கிரேன் எந்திரம் கொண்டுவரப்பட்டது. புகளூர் தீயணைப்பு வீரர்களை காவிரி ஆற்றில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். விநாயகர் சிலை ஊர்வலத்திற்கான ஏற்பாடுகளை இந்து முன்னணியினர் செய்திருந்தனர்.

விநாயகர் சிலை ஊர்வலத்திற்கு கரூர் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பாலமுருகன் தலைமையில், கரூர் டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜராஜன், வேலாயுதம்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் மற்றும் 600-க்கும் மேற்பட்ட போலீசார், ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

SCROLL FOR NEXT