திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் 
ஆன்மிகம்

பாவங்கள் போக்கும் பரம ஏகாதசி

கர்மவினைகளில் இருந்து விடுவிக்கக் கூடிய சக்திவாய்ந்த விரதமாக பரம ஏகாதசி விரதம் கருதப்படுகிறது.

பெருமாளை வழிபட்டு அவரது அருளை பெறுவதற்கு மிகவும் உகந்த விரதம் ஏகாதசி விரதம் ஆகும். விரதங்களில் மிக உன்னதமான விரதமாக கருதப்படும் ஏகாதசி விரதத்தை கடைப்பிடித்தால் வாழும்போது செல்வச்செழிப்பும் வாழ்விற்குப் பின் மோட்சமும் கிடைக்கும் என்பது ஐதீகம்.

ஒவ்வொரு ஏகாதசிக்கும் ஒவ்வொரு சிறப்பு உண்டு. எனினும், சில ஏகாதசி தினங்கள் மிகவும் அரிதாகவும், சிறப்புமிக்கதாகவும் கருதப்படுகின்றன. குறிப்பாக மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை வரக்கூடிய அதிக மாதத்தில் (புருஷோத்தம மாதம்) வரும் ஏகாதசியன்று விரதம் இருந்து பகவானை வழிபட்டால், மற்ற மாதங்களை விட அதிக மடங்கு புண்ணியங்களைத் தரும் என்பது ஐதீகம்.

பகவான் ஸ்ரீகிருஷ்ணர்

பரம ஏகாதசி விரதம்

அவ்வகையில் வைகாசி தேய்பிறையான இன்றைய ஏகாதசி மிகவும் சிறப்பு மிக்கதாகும். இது அதிக மாத தேய்பிறை ஏகாதசி ஆகும். இந்த ஏகாதசி ‘பரம ஏகாதசி’ என்று அழைக்கப்படுகிறது. இன்றைய தினத்தில் விரதம் இருந்து பகவானை வழிபடுவோருக்கு வாழ்க்கைக்கு தேவையான அனைத்து செல்வ நலன்களும் கிடைப்பதுடன், வாழ்க்கைக்கு பிறகு மோட்சமும் கிடைக்கும் என்பது நம்பிக்கை. எவ்வளவு மோசமான கர்மவினைகள் இருந்தாலும் அவற்றில் இருந்து விடுவிக்கக் கூடிய சக்திவாய்ந்த விரதமாக பரம ஏகாதசி விரதம் கருதப்படுகிறது.

பரம ஏகாதசியின் பெருமைகளைப் பற்றி பகவான் கிருஷ்ணர், மகாராஜா யுதிஷ்டிரருக்கு விளக்கிக் கூறியிருக்கிறார். இந்த மங்களகரமான ஏகாதசியில் விரதம் இருந்து வழிபடுவோரின் பாவ விளைவுகள் அனைத்தும் நீங்கும் என்றும், ஜட இன்பத்துடன் முத்தியையும் கொடுக்கும் என்றும் கிருஷ்ணர் கூறியிருக்கிறார்.

பகவான் ஸ்ரீகிருஷ்ணர், பலராமர்

குபேரனுக்கு கிடைத்த பதவி

செல்வத்தின் அதிபதியான குபேரன், பரம ஏகாதசி விரதத்தை அனுஷ்டித்துதான் தேவர்களின் கருவூலத்தை நிர்வகிக்கும் பதவியை அடைந்ததாக புராணங்கள் கூறுகின்றன. அதே போல் தனது ராஜ்ஜியம், செழிப்பு, குடும்பம் என அனைத்தையும் இழந்த ஹரிச்சந்திர மன்னரும் இந்த விரதத்தை அனுசரித்து, அனைத்தையும் திரும்பப் பெற்றதாக சொல்லப்பட்டுள்ளது.

இந்த நாளில் மகாவிஷ்ணுவை வழிபடுவது சிறப்பு. விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணம் செய்வது, ஆலய தரிசனம் செய்வது மிகுந்த புண்ணியத்தைத் தரும். வீட்டில் விளக்கேற்றி விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணம் செய்வது நல்லது.

SCROLL FOR NEXT